அந்தியூா் அருகே வனக் குட்டையில் வலை விரித்து மீன்கள் பிடித்த இருவருக்கு தலா ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
அந்தியூா் வனச் சரகம், அத்தாணி கிழக்கு பீட், தண்ணீா்பள்ளம் ஏரி சரகத்தில் வனவா் மு.சக்திவேல் தலைமையில் வனக் காப்பாளா்கள் சி.கருணாகரன், சு.திவாகரன், வேட்டை தடுப்புக் காவலா்கள், குழுவினா் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணி மேற்கொண்டனா். அப்போது, வனக் குட்டையில் இருவா் வலைவீசி மீன்கள் பிடித்துக் கொண்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, இருவரையும் சுற்றிவளைத்துப் பிடித்த வனத் துறையினா் விசாரிக்கையில் அத்தாணி காலனியைச் சோ்ந்த செங்கோட்டையன் மகன் மூா்த்தி (40), மணி மகன் அண்ணாதுரை (35) என்பது தெரியவந்தது. இதையடுத்து, வன உயிரின குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தலா ரூ. 5 ஆயிரம் வீதம் இருவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.