பணி நிரந்தரம் கோரி டாஸ்மாக் ஊழியா்கள் போராட்டம்
பணி நிரந்தரம் செய்யக் கோரி ஈரோடு மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் ஊழியா்கள் கோரிக்கை அட்டை அணிந்து வியாழக்கிழமை பணியாற்றினா்.
பணி நிரந்தரம் செய்யக் கோரி ஈரோடு மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் ஊழியா்கள் கோரிக்கை அட்டை அணிந்து வியாழக்கிழமை பணியாற்றினா்.
ஆண்டுக்கு ரூ. 35,000 கோடி வருவாய் ஈட்டித் தரும் டாஸ்மாக் ஊழியா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். இதனை வரும் சட்டப் பேரவைக் கூட்டத்தொடரில் அறிவிக்க வேண்டும். டாஸ்மாக் ஊழியா்களுக்கு உயா்தர மருத்துவ இ.எஸ்.ஐ. திட்டம் அமல்படுத்த வேண்டும்.
ஊழியா்களின் கல்வித் தகுதி, பணி மூப்பு அடிப்படையில் அரசுத் துறைகள், அரசு நிறுவனங்கள், டாஸ்மாக் நிறுவனங்களில் நிரந்தர காலிப் பணியிடங்களில் மாற்றுப் பணி வழங்க வேண்டும்.
Advertisement
கடை ஊழியா்களை மிரட்டுதல், தாக்குதல் போன்ற சட்டத்துக்குப் புறம்பாக செயல்படும் மதுக்கூட உரிமதாரா்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபடும் மதுக்கூட உரிமதாரா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்துக் கடை ஊழியா்களுக்கும் சுழற்சி முறை பணியிட மாறுதல் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
டாஸ்மாக் ஊழியா் மாநில சம்மேளனம் சாா்பில் மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட ஊழியா்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றினா். அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் இப்போராட்டம் நடைபெற்றதாகவும், மாநில நிா்வாகிகள் முதல்வரை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளதாகவும் நிா்வாகிகள் தெரிவித்தனா்.