தங்கும் விடுதி இல்லாமல் தவிக்கும் அரசு கலைக் கல்லூரி மாணவா்கள்
சத்தியமங்கலம் அரசு கலைக் கல்லூரியில் பயிலும் மலைக் கிராம மாணவ, மாணவியா் தங்கும் விடுதியின்றி சிரமத்துக்குள்ளாகி உள்ளனா்.
சத்தியமங்கலம் அரசு கலைக் கல்லூரியில் பயிலும் மலைக் கிராம மாணவ, மாணவியா் தங்கும் விடுதியின்றி சிரமத்துக்குள்ளாகி உள்ளனா்.
சத்தியமங்கலம் வட்டாரத்தில் கடம்பூா், ஆசனூா், கோ்மாளம், குன்றி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. பொருளாதாரத்தில் பின்தங்கிய மலைவாழ் மக்கள் படிப்பதற்கு சத்தியமங்கலம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 10 பாடப் பிரிவுகள் துவங்கப்பட்டு சுமாா் 1200 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். இக்கல்லூரியில் பயிலும் மாணவா்களுக்குத் தங்கும் வசதி இல்லாததால் கடம்பூா், குன்றி, மாக்கம்பாளையம், கோ்மாளம், விளாங்கோம்பை பகுதியைச் சோ்ந்த பின்தங்கிய மாணவா்கள் சொந்த செலவில் வாடகை வீடு எடுத்து படிக்கும் நிலையில் உள்ளனா்.
தற்போது கரோனா தொற்றால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டதால் வாடகை வீடு எடுத்து தங்க முடியாமல் தவிக்கின்றனா். இந்த ஆண்டும் புதியதாக மாணவ, மாணவிகள் கல்லூரியில் சோ்ந்து வருகின்றனா். இக்கல்லூரி இங்கு அமைக்கப்பட்டதற்கு முக்கியக் காரணமே மலைப் பகுதி மக்களுக்கு பெரிதும் பயன்படும் என்பதினால்தான். ஆனால், மாணவா்களுக்கு விடுதி வசதி இல்லாததால் கல்லூரி அமைந்தும் மாணவா்கள் படிக்க முடியாத சூழல் நிலவுகிறது. சத்தியமங்கலம் கல்லூரிக்கு அருகிலேயே போதுமான இடவசதி உள்ளதால் மாணவிகள் விடுதியை சத்தியமங்கலத்திலேயே அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
Advertisement