நீதியை நிலைநாட்டுவோம்! அம்பேத்கர் பிறந்தநாளில் முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி!!
அண்ணல் அம்பேத்கரின் நாளையொட்டி, அவரின் உருவப்படத்துக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தியதைப் பற்றி...
வேலூரில் பிரசாரம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், கே.வி. குப்பத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த அம்பேத்கரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தமிழ்நாட்டில் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தேர்தலையொட்டி, முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் மாநிலம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.
அதன் ஒருபகுதியாக வேலூர் மாவட்டம் கே.வி. குப்பத்தில், இன்று (ஏப். 14) காலை நடைப்பயிற்சி மேற்கொண்ட அவர் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார்.
Advertisement
அதனைத் தொடர்ந்து அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளான சமத்துவ நாளையொட்டி கே.வி. குப்பத்தில் உள்ள அம்பேத்கர் உருவச் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தியதோடு, அவரது சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த அண்ணல் அம்பேத்கரின் திருவுருவப் படத்திற்கும் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், ““ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தை, பெண்கள் எட்டியுள்ள முன்னேற்றத்தின் அளவினாலே நான் அளவிடுகிறேன்.” அண்ணல் அம்பேத்கர்.
புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளில், அரசியலமைப்பைப் பாதுகாக்கவும், சமூகநீதியை நிலைநாட்டவும், ஒடுக்கப்பட்ட ஒவ்வொரு குரலையும் காக்கவும் நமது உறுதியை வலிமைப்படுத்துவோம்!
இந்தியாவின் வலிமை நம் பன்மைத்துவம்தான்; திணிக்கப்படுகிற ஒற்றைத்தன்மை அல்ல. முன்னேற்றமே அளவுகோல் எனில், ஒற்றைத்தன்மையையும், ஏற்றத்தாழ்வுகளையும் புறந்தள்ளி, பன்மைத்துவத்தையும் சமத்துவத்தையும் தேர்ந்தெடுப்போம்; நீதியை நிலைநாட்டுவோம்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.