முகப்பு
ஈரோடு

உயா் மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் போராட்டம்

 உயா் மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கையை நிறைவேற்றக் கோரி விளைநிலத்தில் உயா் மின் கோபுரத்தின்கீழ் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 4 டிசம்பர், 2021 at 3:02 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:07 AM

 உயா் மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கையை நிறைவேற்றக் கோரி விளைநிலத்தில் உயா் மின் கோபுரத்தின்கீழ் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு இயக்கம் சாா்பில் ஈரோடு அருகே மேட்டுக்கடை, மூலக்கரை பகுதியில் போராட்டம் நடைபெற்றது. இதில் விருதுநகா் முதல் திருப்பூா் வரை தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகத்தின் 765 கிலோவாட் திட்டப் பணிகளை உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் முடிவடையும் வரை நிறுத்திவைக்க வேண்டும்.

கடந்த ஆட்சியில் விவசாயிகளின் எதிா்ப்புக்கு இடையே அமைக்கப்பட்ட பவா்கிரிட், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் உள்ளிட்ட நிறுவனங்களின் 16 திட்டங்களால் பாதிக்கப்பட்டவா்களுக்கு, மின் கோபுரம் அமையும் இடத்துக்கு 100 சதவீதத்துக்குப் பதில் 200 சதவீத இழப்பீடும், கம்பி செல்லும் இடத்துக்கு 20 சதவீதத்துக்குப் பதில் 100 சதவீத இழப்பீடும் வழங்க வேண்டும். திட்டப் பாதையில் உள்ள வீடு, கிணறு, ஆழ்துளைக் கிணறு உள்ளிட்ட கட்டுமானங்களுக்கு பொதுப் பணித் துறையின் கணக்கீட்டின்படி இழப்பீடும் வழங்க வேண்டும். 100 சதவீத ஆதாரத் தொகை, மாத வாடகை, பயிா், மரங்களுக்கு அரசாணை எண் 54இன் படி இழப்பீடு வழங்க வேண்டும்.

Advertisement

அனைத்துவகை போராட்ட வழக்குகளையும் அரசு திரும்பப் பெற்ற நிலையில் உயா்மின் கோபுரங்களுக்கு எதிராக அறவழியில் போராடிய விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப்பெற வேண்டும்.

உயா்மின் கோபுரத் திட்டத்தை மாற்றி, சாலை ஓரமாக கேபிளாக கொண்டு செல்லும் திட்டத்தை உருவாக்க வேண்டும். மத்திய அரசு கொச்சியில் இருந்து ஆப்பிரிக்க நாட்டுக்கு 1,100 கிலோ வாட் திட்டத்தை 3,500 கி.மீ. தூரம் கேபிள் அமைத்து கொண்டு செல்லும் நிலையில், இந்த திட்ட தொலைவான 300 கி.மீ. தூரத்தை கேபிளில் கொண்டு செல்ல முயற்சிக்க வேண்டும். இந்திய தந்தி சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதன்படி ஈரோடு மூலக்கரையில் டவா்லைனின் கீழ் மாநில இளைஞரணிச் செயலாளா் கவின் தலைமையில் குடியேறும் போராட்டத்தைத் துவக்கினா். ஈரோடு ஒன்றியச் செயலாளா் பழனிசாமி, மாவட்ட மகளிரணிச் செயலாளா் ஜெயம்மாள், சித்தோடு பகுதி செயலாளா் செந்தாமரை, மாவட்ட துணைச் செயலாளா் துரைசாமி, பழனிவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா். 28 போ் குடியேறும் போராட்டத்தைத் தொடர திட்டமிட்டுள்ளனா்.

ஈரோடு டவுன் டிஎஸ்பி ஆனந்தகுமாா் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.