பத்திரிகையாளர்களுக்கு மாதம் ரூ.5,000 உதவித்தொகை: மேற்கு வங்கத்தில் பாஜக வாக்குறுதி!
மேற்கு வங்கத்தில் ஆட்சிக்கு வந்தால் பத்திரிகையாளர்களுக்கு மாதம் ரூ.5,000 உதவித்தொகை வழங்கப்படும் என பாஜக அறிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் ஆட்சிக்கு வந்தால் பத்திரிகையாளர்களுக்கு மாதம் ரூ. 5,000 உதவித்தொகை வழங்கப்படும் என பாஜக அறிவித்துள்ளது.
மேற்கு வங்க பாஜக தலைவர் சாமிக் பட்டாச்சார்யா இன்று செய்தியாளர்களுடன் பேசுகையில், “பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் பத்திரிகையாளர்களுக்கு மாதம் ரூ. 5,000 உதவித்தொகை வழங்கப்படும். பத்திரிகையாளர்களில் எந்தப் பிரிவினையும் இல்லாமல் குறிப்பிட்ட தகுதி மற்றும் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் அனைவருக்கும் இந்தத் திட்டம் பொருந்தும்” என அவர் கூறினார்.
மேலும், ”நமக்காக எழுதுபவர்களாக இருந்தாலும் சரி. நமக்கு எதிராக எழுதுபவர்களாக இருந்தாலும் சரி. பத்திரிகையாளர்கள் அனைவரும் நமது நண்பர்களே. உங்களுடைய சுதந்திரத்தையும் உரிமைகளையும் நாங்கள் மதிக்கிறோம்.
Advertisement
Advertisement
இதன்மூலம் வழங்கப்படும் தொகை மிக அதிகமாக இல்லாவிட்டாலும் ஊடகத் துறையினருக்கு நிதி ஆதரவும் பாதுகாப்பு உணர்வும் வழங்கும் நோக்கில் இதைக் கொண்டுவரவுள்ளோம்.
இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான நடைமுறை விவரங்கள் வகுக்கப்பட்டு பின்னர் பகிரப்படும்” என்று அவர் தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 4 அன்று வெளியாகிறது.