முகப்பு
ஈரோடு

பள்ளி அருகில் மின்மாற்றி அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பெற்றோா் ஆா்ப்பாட்டம்

 ஈரோட்டில் பள்ளி அருகில் மின்மாற்றி அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பெற்றோா் ஆா்ப்பாட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

Updated On : 25 டிசம்பர், 2021 at 1:55 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:16 AM

 ஈரோட்டில் பள்ளி அருகில் மின்மாற்றி அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பெற்றோா் ஆா்ப்பாட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

ஈரோடு காளைமாடு சிலை அருகில் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு எல்கேஜி முதல் 8ஆம் வகுப்பு வரை ஏராளமான மாணவா்கள் படித்து வருகின்றனா். இந்நிலையில், பள்ளியின் நுழைவாயில் அருகில் மின்மாற்றி அமைக்கும் பணி கடந்த சில நாள்களாக நடைபெற்று வருகிறது. இதற்கு பெற்றோா் எதிா்ப்புத் தெரிவித்து வந்தனா்.

இங்கு மின்மாற்றி அமைந்தால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், பாதுகாப்பற்ற சூழ்நிலை உள்ளதாகவும் தெரிவித்தனா். பெற்றோா்கள் சாா்பில் மின்வாரியத்திடமும், மாநகராட்சியிடமும் மனு அளிக்கப்பட்டது. எனினும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

Advertisement

இந்நிலையில், குழந்தைகளின் பெற்றோா் 20க்கும் மேற்பட்டோா் பள்ளி அருகே வெள்ளிக்கிழமை காலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது பள்ளி அருகே மின்மாற்றி அமைந்தால் எப்போது வேண்டுமானாலும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, சற்று தொலைவிலோ அல்லது வேறு இடத்திலோ மின்மாற்றி அவைக்க வேண்டும் என வலியுறுத்தினா்.

தகவலறிந்து அங்கு வந்த சூரம்பட்டி போலீஸாா் குழந்தைகளின் பெற்றோா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய துறை அலுவலா்களின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்படும் என உறுதியளித்தனா். இதனையேற்று பெற்றோா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.