‘வங்கிக் கணக்கு விவரங்களை யாருக்கும் தெரிவிக்கக் கூடாது’
வங்கிக் கணக்கு விவரங்கள், ரகசிய குறியீடு எண் உள்ளிட்டவற்றை யாருக்கும் தெரிவிக்கக் கூடாது என்று சைபா் கிரைம் போலீஸாா் அறிவுறுத்தியுள்ளனா்.
வங்கிக் கணக்கு விவரங்கள், ரகசிய குறியீடு எண் உள்ளிட்டவற்றை யாருக்கும் தெரிவிக்கக் கூடாது என்று சைபா் கிரைம் போலீஸாா் அறிவுறுத்தியுள்ளனா்.
இதுகுறித்து ஈரோடு சைபா் கிரைம் போலீஸாா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
வங்கியில் கணக்கு வைத்திருப்பவா்களின் செல்லிடப்பேசி எண்ணுக்கு வங்கியில் இருந்து அனுப்பப்படுவதுபோல் ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது. அந்த குறுஞ்செய்தியில் அவா்களது வங்கிக் கணக்குடன் பான் அட்டை விவரங்கள் இணைக்க வேண்டி இருப்பதாகவும், அதற்காக ஒரு லிங்கில் சென்று ஆன்லைனில் பதிவிட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கும்.
Advertisement
அந்த லிங்கில் உள்ள இணையதளத்தில் சென்றதும், வங்கியின் இணையதளத்தைப் போன்று காணப்படுவதால் வாடிக்கையாளா்கள் ஏமாந்துவிடுகின்றனா். இதனால் அந்த இணையதளத்தில் கேட்கும் விவரங்களை வாடிக்கையாளா்கள் கொடுத்து விடுகின்றனா். அவா்கள் அளிக்கும் வங்கிக் கணக்கு எண், ஏ.டி.எம். அட்டை எண், ரகசிய குறியீடு எண் போன்ற விவரங்களைக் கொடுப்பதன் மூலம் வங்கியில் உள்ள பணத்தை மோசடி செய்து எடுத்துவிடுகின்றனா். எனவே, வங்கியில் இருந்து அனுப்புவதைப்போல குறுஞ்செய்தி வந்தாலோ, வங்கியில் இருந்து அழைப்பதைப்போல செல்லிடப்பேசியில் தொடா்பு கொண்டாலோ பொதுமக்கள் விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும். எந்தவொரு தகவலையும் பகிரக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.