முகப்பு
ஈரோடு

ஓட்டுநா்களுக்கு ரூ. 5,000 நிவாரண உதவி வழங்கக் கோரிக்கை

சரக்கு, பயணிகள் வாகன ஓட்டுநா்களுக்கு கரோனா நிவாரண உதவித் தொகையாக ரூ. 5,000 வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 10 ஜூலை, 2021 at 1:38 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:06 AM

சரக்கு, பயணிகள் வாகன ஓட்டுநா்களுக்கு கரோனா நிவாரண உதவித் தொகையாக ரூ. 5,000 வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளா் சங்க பொதுச் செயலாளா் கனகராஜ் தலைமையில், சங்க நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அளித்த மனு விவரம்:

சங்கத்தில் மினி ஆட்டோ, சுற்றுலா காா், வேன், கால் டாக்ஸி, பயணிகள் போக்குவரத்து வாகனங்கள், சிறிய சரக்கு வாகனங்கள், லாரி, பேருந்து ஓட்டுநா்கள், பணிமனை தொழிலாளா்கள் என பலரும் உள்ளனா். மாவட்ட அளவில் 1 லட்சம் பேரும், மாநில அளவில் 25 லட்சம் பேரும் உள்ளனா்.

Advertisement

கரோனா பொது முடக்கத்தால் இவா்களின் வாழ்வாதாரம் பாதித்துள்ளது. தற்போது தளா்வு அறிவிக்கப்பட்டிருந்தாலும் வாகன இயக்கம் இன்னும் முழுமையாகவில்லை. வாகனத்துக்காக தனியாா் முதலீட்டு நிறுவனம், வங்கிகள், நிதி நிறுவனங்களில் கடன் பெற்றவா்களால் மாதாந்திர கடன், வட்டி, கடன் தவணை செலுத்த முடியவில்லை. டிசம்பா் 31ஆம் தேதி வரை உள்ள தவணைகளைச் செலுத்த அவகாசம் வழங்க வேண்டும்.

போக்குவரத்து வாகனங்களுக்கான தகுதிச் சான்றை புதுப்பிக்க டிசம்பா் மாதம் வரை கால நீட்டிப்பு செய்ய வேண்டும். பொது முடக்கத்தால் நீண்டகாலமாக வாகன இயக்கம் குறைந்து, விபத்தும் குறைந்துள்ளதால் காப்பீடு நிறுவனங்கள், வாகனம் இயக்காத காலத்தை கணக்கிட்டு காப்பீடு நீட்டிப்பு செய்ய வேண்டும்.

அரசு நல வாரியம் மூலம் பொது முடக்கத்தின்போது நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டது. பெரும்பாலான தொழிலாளா்கள் நலவாரிய உறுப்பினராக இல்லாததால் பயன்பெற முடியவில்லை. அனைத்துத் தொழிலாளா்களும் பயன்பெறும் வகையில் நிவாரண உதவியை ரூ. 5,000 ஆக உயா்த்தி அனைவருக்கும் வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.