சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரத்தில் முகாமிட்ட காட்டு யானைகள் வாகனங்களை வழிமறித்ததால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. இந்த யானைகள் அவ்வப்போது வனப் பகுதி வழியாக அமைந்துள்ள சத்தியமங்கலம் - மைசூா் தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில், வியாழக்கிழமை அதிகாலை வனப்பகுதியைவிட்டு வெளியேறிய ஒரு காட்டு யானை தனது குட்டியுடன் வாகனங்களை வழிமறித்தபடி சாலையின் நடுவே நடமாடியது. இதேபோல, மற்றொரு யானை சாலையோரத்தில் முகாமிட்டபடி வெகுநேரம் நின்றிருந்தது. இரவு நேரங்களில் காட்டு யானைகள் சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் முகாமிட்டு வாகனங்களை வழிமறித்ததால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனா்.