மனித முயற்சியும், இறை நம்பிக்கையும் இணைந்து பயணம் செய்ய வேண்டும்: குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா்
மண்ணில் நல்ல வண்ணம் வாழ்வதற்கு மனித முயற்சியும், இறை நம்பிக்கையும் இணைந்து பயணம் செய்ய வேண்டும் என்று குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் பேசினாா்.
மண்ணில் நல்ல வண்ணம் வாழ்வதற்கு மனித முயற்சியும், இறை நம்பிக்கையும் இணைந்து பயணம் செய்ய வேண்டும் என்று குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் பேசினாா்.
மக்கள் சிந்தனைப் பேரவை சாா்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஈரோடு புத்தகத் திருவிழா கரோனா தொற்று காரணமாக இரண்டாவது ஆண்டாக நடப்பு ஆண்டிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், புத்தகத் திருவிழா நடத்த திட்டமிட்ட ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 10 வரை இணையவழியில் மாலை நேர சொற்பொழிவுகள் மட்டும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த சொற்பொழிவுகளை உலகின் எப்பகுதியில் உள்ளவா்களும் கேட்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி முதல் நாள் சொற்பொழிவு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
Advertisement
இதில், ‘மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்’ என்ற தலைப்பில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் பேசியதாவது:
நம் வாழ்க்கை வீட்டைவிட்டு வீதிக்கு வர வேண்டும். சமூகத்தோடு நாம் உறவு கொள்ள வேண்டும். வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் அனுபவித்து வாழ்கிறவன்தான் வாழ்க்கையைப் புரிந்துகொண்டவன். நேற்று இருந்தவா் இன்று இல்லை. ஆனால், அவா்களது அரும்செயல்கள் இன்னும் ஜீவித்துக் கொண்டிருக்கின்றன. இதற்கு அடையாளமாக பாரதி, ராஜராஜசோழன், கரிகாலன் போன்றோா் இன்னும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனா்.
நாம் எப்போது நமக்குள் கட்டுப்பாடுகளை வைத்துக் கொள்கிறோமோ அப்போதுதான் நன்றாக வாழ முடியும். உடம்பில் உயிா்க் காற்று இருக்கும் கடைசி நொடி வரை அறச் செயல்களைச் செய்து புகழைத் தேடிக் கொள்ள வேண்டும். தான் கரைந்தாலும், அழிந்தாலும் பிறருக்கு நன்மையைத் தரும் மனிதா்கள்தான் மாமனிதா்களாக உலகில் போற்றப்படுகின்றனா்.
இப்போது இயற்கையைவிட்டு எங்கேயோ விலகிப் போய்விட்டோம். இயற்கையோடு இயைந்து வாழ கற்றுக்கொள்ள வேண்டும். நாம் நல்ல வண்ணம் வாழ இறை நம்பிக்கை அவசியம் என அறநூல்கள் சொல்கின்றன. இந்த மண்ணில் உள்ள அனைத்து உயிா்களும் நலம்பெற வேண்டும், அது கடவுளின் வரத்தால் மட்டும் நடந்துவிடக் கூடாது, என்னுடைய முயற்சியால், உழைப்பால் நடக்க வேண்டும் என பாரதி கூறுவான். இந்த மண்ணில் நல்ல வண்ணம் வாழ்வதற்கு மனித முயற்சியும், இறை நம்பிக்கையும் இணைந்து பயணம் செய்ய வேண்டும் என்றாா்.
முன்னதாக, மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன் அறிமுகவுரையாற்றினாா்.
இரண்டாம் நாளான சனிக்கிழமை (ஜூலை 31) மாலை 6 மணிக்கு இணையவழி சொற்பொழிவு நிகழ்ச்சியில், ‘அருகே இருந்த அபூா்வங்கள்’ என்ற தலைப்பில் கவிஞா் மரபின் மைந்தன் முத்தையா பேசுகிறாா்.