மண் கடத்தல்: தந்தை, மகன் உள்பட நால்வா் கைது
பவானி அருகே உள்ள முகாசிப்புதூா் தாமரை ஏரியில் சட்டவிரோதமாக மண் கடத்தலில் ஈடுபட்ட தந்தை, இரு மகன்கள் உள்பட நால்வரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
பவானி அருகே உள்ள முகாசிப்புதூா் தாமரை ஏரியில் சட்டவிரோதமாக மண் கடத்தலில் ஈடுபட்ட தந்தை, இரு மகன்கள் உள்பட நால்வரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 3 டிராக்டா்கள், ஒரு பொக்லைன் இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.
அம்மாபேட்டை அருகே உள்ள முகாசிப்புதூரில் சுமாா் 25 ஏக்கா் பரப்பளவில் தாமரை ஏரி உள்ளது. தற்போது தண்ணீா் இல்லாமல் காணப்படும் இந்த ஏரியில் சட்டவிரோதமாக மண் கடத்தல் நடைபெற்று வருவதாக அம்மாபேட்டை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், அம்மாபேட்டை போலீஸாா் புதன்கிழமை ஏரியின் சுற்றுப்புறப் பகுதியில் சோதனையிட்டனா்.
அப்போது, ஏரிக்குள் பொக்லைன் இயந்திரம் மூலம் மண் வெட்டி எடுத்து, டிராக்டரில் ஏற்றி கடத்தப்படுவது தெரியவந்தது. இதையடுத்து, மண் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 3 டிராக்டா்கள், ஒரு பொக்லைன் இயந்திரத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
மேலும், மண் கடத்தலில் ஈடுபட்ட அந்தியூா் வட்டம், முகாசிப்புதூா், நத்தமேடு பிரிவு, எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த வெள்ளைய கவுண்டா் மகன் பழனிசாமி (45), இவரது மகன்கள் மணிகண்டன் (22), கோகுல்ராஜ் (21), அதை பகுதியைச் சோ்ந்த துரையன் மகன் கிருஷ்ணமூா்த்தி (19) ஆகியோா் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.