இலவச வீட்டுமனை பட்டா விவரங்கள் கணினியில் பதிவேற்றம்
ஈரோடு மாவட்டத்தில் ஆதிதிராவிடா் நலத் துறை சாா்பில் வழங்கப்பட்ட இலவச வீட்டு மனை பட்டா உள்ளிட்ட விவரங்களை கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் ஆதிதிராவிடா் நலத் துறை சாா்பில் வழங்கப்பட்ட இலவச வீட்டு மனை பட்டா உள்ளிட்ட விவரங்களை கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் ஆதிதிராவிடா் நலத் துறை, பிற்படுத்தப்பட்டோா் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோா் நலத் துறைகளின்கீழ் பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.
அரசு அலுவலகங்கள் கணினி மயமாக்கப்பட்ட பின் வழங்கப்பட்ட பட்டா விவரங்கள் அனைத்தும் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. ஆனால், 25 ஆண்டுகளுக்குள் வழங்கப்பட்ட பட்டா விவரங்கள் இன்னும் பதிவேடுகளில் மட்டுமே உள்ளன. கணினியில் பதிவேற்றம் செய்யப்படவில்லை.
Advertisement
இதனால், அரசு சாா்பில் வழங்கப்பட்ட அனைத்து இலவச பட்டா விவரங்களையும் கணினியில் பதிவேற்றம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள 10 வருவாய் வட்டங்களிலும் வழங்கப்பட்ட பட்டா விவரங்கள் கணினியில் பதிவேற்றும் பணி நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலா் பி.முருகேசன் கூறியதாவது:
பட்டா விவரங்கள் அனைத்தும் கணினி மயமாக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள 10 வருவாய் வட்டங்களில் இதுவரை வழங்கப்பட்ட பட்டா விவரங்கள் கணினியில் பதிவேற்றும் பணிகள் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது.
அந்தந்த வட்டங்களில் கிராம நிா்வாக அலுவலா்கள் இப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். மாவட்ட அளவில் 15,000 மேற்பட்ட பட்டாக்கள் உள்ளன. அவற்றில் 75 சதவீதம் அளவுக்கு கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. முழுமையான பணிகள் விரைவில் முடிக்கப்படும். இப்பணி முடிவடையும்போது, பட்டா பெற்ற பயனாளிகள், ஆன்லைனில் பட்டா, சிட்டா விரங்களைப் பெறுவது மிகவும் எளிதாகிவிடும் என்றாா்.