ஜவ்வரிசியில் கலப்படத்தை தடுக்க கண்காணிப்புக் குழு அமைக்கக் கோரிக்கை
ஜவ்வரிசியில் கலப்படத்தை தடுக்க மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஜவ்வரிசியில் கலப்படத்தை தடுக்க மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது குறித்து தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளா் செ.நல்லசாமி சேலம் சேகோசா்வ் மேலாண்மை இயக்குநருக்கு அனுப்பிய கோரிக்கை மனு விவரம்:
சேகோசா்வ் மேலாண்மை இயக்குநா் கடந்த 20 நாள்களாக ஜவ்வரிசி தொழிற்சாலைகளில் கள ஆய்வு செய்ததால், கலப்பட ஜவ்வரிசி உற்பத்தி, கெமிக்கல் வாஷ் ஜவ்வரிசி உற்பத்தியை கண்டறிந்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை எடுத்தமைக்கு மரவள்ளி கிழங்கு விவசாயிகள் நன்றி தெரிவிக்கிறோம்.
Advertisement
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கலப்பட ஜவ்வரிசி உற்பத்தி, கெமிக்கல் வாஷ் மூலம் கலப்பட ஜவ்வரிசியை உற்பத்தி செய்து, அதிக லாபம் பாா்த்துவிட்டனா். நடவடிக்கைக்குப் பின் இதை செய்ய மாட்டாா்கள் என உத்தரவாதம் இல்லை.
கலப்படத்தை தடுக்க சேலம் மாவட்ட ஆட்சியா் தலைமையில் பல்வேறு துறை அலுவலா்கள், விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகளை கொண்ட மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும்.
குறிப்பிட்ட நாள்களுக்கு ஒரு முறை ஆலைகளை ஆய்வு செய்வது கலப்படத்தை தடுக்கும் போது, மரவள்ளி கிழங்குக்கான உரிய விலையை விவசாயிகள் பெறும் வாய்ப்பு கிடைக்கும். மக்களுக்கு தரமான ஜவ்வரிசி கிடைப்பதை உறுதி செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.