அமைதிப்பேச்சு! ஈரான், துருக்கியில் இருந்து நாடு திரும்பும் பாக். பிரதமர், ராணுவத் தளபதி!
பாகிஸ்தானின் பிரதமர் மற்றும் ராணுவத் தலைமைத் தளபதி ஆகியோர் நாடு திரும்பியது குறித்து...
ஈரான் மற்றும் துருக்கி உள்ளிட்ட நாடுகளுக்குத் தனித்தனியாக அரசு முறைப் பயணம் மேற்கொண்ட பாகிஸ்தானின் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப் மற்றும் ராணுவத் தலைமைத் தளபதி ஆசிம் முனீர் ஆகியோர் தங்களது தாயகத்துக்குத் திரும்புவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் தலைமையில் இஸ்லாமாபாதில் நடைபெற்ற அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான முதற்கட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன.
இந்தப் பேச்சுவார்த்தைகளில், ஈரான் சார்பில் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தலைமையிலான குழுவும், அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தலைமையிலான குழுவினரும் பங்கேற்றனர்.
Advertisement
இதனைத் தொடர்ந்து, ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே அமலில் உள்ள 2 வார போர்நிறுத்த காலம் முடிவடைய இருப்பதால், 2 ஆம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கும் முனைப்பில் பாகிஸ்தான் அரசு ஈடுபட்டுள்ளது.
இதனால், பாகிஸ்தான் பிரதமர் ஷரீப் சௌதி அரேபியா, கத்தார் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கும், ராணுவத் தலைமைத் தளபதி முனீர் ஈரானுக்கும் அரசு முறைப் பயணம் மேற்கொண்டனர்.
இந்த நிலையில், ஈரானின் வெளியுறவு அமைச்சர் அராக்சி, நாடாளுமன்ற அவைத் தலைவர் முகமது பாகர் கால்பாஃப் மற்றும் அந்நாட்டின் ராணுவத் தலைவர்களை நேரில் சந்தித்து ஆசிம் முனீர் பேச்சுவார்த்தை மேற்கொண்டார்.
இத்துடன், இறுதி நாடாக துருக்கிக்குச் சென்ற பிரதமர் ஷரீஃப் இன்று தனது பயணத்தை நிறைவு செய்கிறார். மேலும், தளபதி முனீர் மற்றும் பிரதமர் ஷரீஃப் ஆகியோர் சனிக்கிழமை (ஏப். 18) பாகிஸ்தான் திரும்புவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஈரான் மற்றும் அமெரிக்கா இடையில் 2 ஆம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையில் போர்நிறுத்தம் அமலுக்கு வந்ததையடுத்து ஹோர்முஸ் நீரிணையை ஈரானிய அரசு முழுவதுமாகத் திறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.