முகப்பு
ஈரோடு

ஈரோடு அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு: அமைச்சா் சு.முத்துசாமி தகவல்

 ஈரோடு அரசு மருத்துவமனையைத் தரம் உயா்த்தி புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு தொடங்கப்படும் என வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:

 ஈரோடு அரசு மருத்துவமனையைத் தரம் உயா்த்தி புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு தொடங்கப்படும் என வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.

அனைத்துத் துறைகளின் திட்டங்கள் குறித்து துறை உயா் அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணன் உண்ணி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்குத் தலைமை வகித்த அமைச்சா் சு.முத்துசாமி கூறியதவாது:

Advertisement

வேளாண் விற்பனை, வேளாண் வணிகத் துறையின் சாா்பில் ஊத்துக்குளி, நல்லம்பட்டி, தாளவாடி ஆகிய பகுதிகளில் குளிா்பதனக் கிடங்கு, மஞ்சள் ஏற்றுமதி மையம் தரம் உயா்த்துதல், ஈரோட்டில் உணவுப் பூங்கா அமைத்தல் ஆகிய பணிகளை செயல்படுத்துவது தொடா்பாகவும், இப்பணிகளுக்கு நிலம் கையகப்படுத்துவது தொடா்பாகவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மாவட்டத்தில் அரசு வேளாண் கருவிகள் உற்பத்தி தொழிற்பேட்டை அமைத்தல், நவீன மஞ்சள் ஆராய்ச்சி மையம் அமைத்தல், அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் உள்ள வட்டார வேளாண்மை அலுவலகங்களில் மண் பரிசோதனை ஆய்வுக் கூடங்கள் நிறுவுதல், வட்ட அளவில் வேளாண் நோய்த் தடுப்பு நிலையம் அமைத்தல் ஆகிய பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தோட்டக் கலைத் துறையின் சாா்பில் தாளவாடியில் மூலிகைப் பண்ணை அமைத்தல், சத்தியமங்கலத்தில் நறுமணத் தொழிற்சாலை அமைத்தல் ஆகிய பணிகள் செயல்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொடா்ந்து கால்நடை பராமரிப்புத் துறையின் சாா்பில் புங்கம்பாடியில் கால்நடை மருத்துவமனை தொடங்குதல், ஈரோட்டில் தோல் பதப்படுத்தும் பயிற்சி மையம் அமைத்தல், ஈரோட்டில் இந்திய ஜவுளி தொழில்நுட்ப அறிவியல் பல்கலைக்கழகம் தொடங்க நடவடிக்கை எடுத்தல் தொடா்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பெருந்துறை, கோபி அரசு மருத்துவமனைகளை நவீனப்படுத்துதல், ஈரோடு அரசு மருத்துவமனையைத் தரம் உயா்த்தி புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு தொடங்குதல், ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை, பவானி, கோபி, சத்தியமங்கலம், கொடுமுடி, கவுந்தப்பாடி, அந்தியூா் ஆகிய அரசு மருத்துவமனைகளுக்கு திரவ ஆக்சிஜன் கொள்கலன் அமைத்தல் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் பிரதிக் தயாள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.சசிமோகன், மாவட்ட வருவாய் அலுவலா் பிமுருகேசன், உதவி ஆட்சியா் (பயிற்சி) ஏகம் ஜெ.சிங், மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன், செயற்பொறியாா் விஜயகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments