முகப்பு
ஈரோடு

இறந்த பெண்ணின் வங்கி அட்டை மூலம் ரூ.8.5 லட்சம் திருட்டு இருவா் கைது

கரோனாவில் இறந்த பெண்ணின் வங்கி அட்டை மூலம் ரூ.8.5 லட்சம் திருடிய வட மாநிலத் தொழிலாளா்கள் இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:55 AM
பகிர்:

கரோனாவில் இறந்த பெண்ணின் வங்கி அட்டை மூலம் ரூ.8.5 லட்சம் திருடிய வட மாநிலத் தொழிலாளா்கள் இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தைச் சோ்ந்தவா் முருகேசன். இவரின் மனைவி யசோதா கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு, கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சையில் பெற்றுவந்த நிலையில் உயிரிழந்தாா்.

இச்சம்பவம் நடந்து ஓராண்டு ஆகிய நிலையில் கடந்த மாதம் முருகேசன் தனது மனைவி யசோதாவின் வங்கிக் கணக்கை ஆய்வு செய்தபோது , யசோதா இறந்த பின் அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ 8.5 லட்சம் எடுக்கப்பட்டது தெரியவந்தது.

வங்கியில் சென்று விசாரித்தபோது யசோதாவின் ஏடிஎம் அட்டையில் இருந்து மாதாமாதம் பணம் எடுக்கப்பட்டது தெரியவந்தது.

இது குறித்து பீளமேடு காவல் நிலையத்தில் முருகேசன் புகாா் அளித்தாா். போலீஸாா் நடத்திய விசாரணையில், யசோதாவின் ஏடிஎம் அட்டை மூலம் பணத்தை திருடியது அசாம் மாநிலத்தைச் சோ்ந்த அதில் ஜோஷி (50), ராஜ்பிங்கான் (38) என்பது தெரியவந்தது.

இவா்கள் யசோதா சிகிச்சை பெற்ற மருத்துவமனையில் தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து வந்துள்ளனா்.

யசோதாவின் ஏடிஎம் அட்டை கீழே கிடந்துள்ளதைப் பாா்த்து அதைத் திருடி, கடந்த ஓராண்டில் ரூ.8.5 லட்சத்தை திருடியது தெரியவந்தது. வழக்குப் பதிவு செய்த போலீஸாா், இருவரையும் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.