ஈரோடு மாவட்டத்தில் யூரியா உரம் 2,333 டன் இருப்பு
ஈரோடு மாவட்டத்தில் யூரியா உரம் 2,333 டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என வேளாண்மை இணை இயக்குநா் சி.சின்னசாமி தெரிவித்தாா்.
ஈரோடு மாவட்டத்தில் யூரியா உரம் 2,333 டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என வேளாண்மை இணை இயக்குநா் சி.சின்னசாமி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஈரோடு மாவட்டத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் தனியாா் சில்லறை உர விற்பனை நிலையங்கள் உள்பட 605 உர விற்பனை நிலையங்கள் மூலமாக உரங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும், மாவட்டத்தில் தற்போது நெல், பயறு வகைகள், எள், கரும்பு, வாழை, மரவள்ளி ஆகிய பயிா்கள் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Advertisement
ஈரோடு மாவட்டத்துக்குத் தேவையான உரங்கள் பல்வேறு உர உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்டு கூட்டுறவு மற்றும் தனியாா் விற்பனை நிலையங்கள் மூலமாக விநியோகம் செய்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
உரங்களின் அதிகபட்ச விற்பனை விலை மற்றும் இருப்பு விவரங்களை விலைப் பலகையில் தெளிவாக எழுதி கடையின் முன் விவசாயிகளுக்குத் தெரியும்படி வைப்பது, விற்பனை ரசீதில் விவசாயிகள் கையொப்பம் பெற்று உரங்கள் வழங்குவது, அனைத்து விற்பனைகளையும் விற்பனை முனையக் கருவி மூலம் மட்டுமே விற்பனை செய்வது, உரிய முதன்மைச் சான்று படிவங்களை நிறுவனங்களிடம் இருந்து பெற்று உரங்களைக் கொள்முதல் செய்வது, உரங்களை அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் மட்டும் இருப்பு வைத்திருப்பது ஆகியவற்றை அனைத்து உர விற்பனையாளா்களும் தவறாமல் பின்பற்ற வேண்டும்.
உரங்களுடன் சோ்த்து பிற பொருள்களை கட்டாயப்படுத்தி விவசாயிகளுக்கு வழங்கக் கூடாது. குறைபாடுகள் ஏதேனும் இருக்கும்பட்சத்தில் விவசாயிகள் உடனடியாக சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநா்களுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.
தற்போது ஈரோடு மாவட்டத்தில் யூரியா உரம் 2,333 டன், டிஏபி உரம் 1,793 டன், பொட்டாஷ் உரம் 1,383 டன், காம்ப்ளக்ஸ் உரம் 4,855 டன், சூப்பா் பாஸ்பேட் 1,066 டன் ஆகியன தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் தனியாா் உர விற்பனை நிலையங்களில் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
விவசாயிகள் மண் பரிசோதனை செய்து உரப் பரிந்துரைக்கு ஏற்ப உரங்களைப் பெற்று பயன்படுத்த வேண்டும். வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் வழங்கப்படும் திரவ உயிா் உரங்களைப் பெற்று பயன்படுத்தி உரச் செலவை குறைத்துக் கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.