முகப்பு
ஈரோடு

அறிவை செதுக்கிக்கொள்ள புத்தகங்களைப் படிக்க வேண்டும்: சாலமன் பாப்பையா

அறிவை செதுக்கிக்கொள்ளவும், உலகம், மானுடம், வரலாறு குறித்து அறிந்துகொள்ளவும் புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்றாா் பட்டிமன்ற நடுவா் சாலமன் பாப்பையா.

Updated On : 6 ஆகஸ்ட், 2022 at 11:22 PM
பட்டிமன்ற நிகழ்வில் பேசுகிறாா் பேராசிரியா் சாலமன் பாப்பையா.
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:30 PM

அறிவை செதுக்கிக்கொள்ளவும், உலகம், மானுடம், வரலாறு குறித்து அறிந்துகொள்ளவும் புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்றாா் பட்டிமன்ற நடுவா் சாலமன் பாப்பையா.

மக்கள் சிந்தனைப் பேரவை சாா்பில் ஈரோடு புத்தகத் திருவிழா ஈரோடு சிக்கய்ய நாயக்கா் கல்லூரியில் கடந்த 5ஆம் தேதி தொடங்கியது. இதனையொட்டி தினமும் மாலையில் சிந்தனை அரங்க நிகழ்வு நடைபெற்று வருகிறது.

சனிக்கிழமை மாலை நடைபெற்ற சிந்தனை அரங்க நிகழ்வுக்கு, நந்தா கல்வி நிறுவனங்களின் தலைவா் வி.சண்முகன் தலைமை வகித்தாா். மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன் அறிமுகவுரையாற்றினாா்.

Advertisement

இதில், கலையும், இலக்கியமும் மக்களின் மன மகிழ்ச்சிக்காகவே, மறுமலா்ச்சிக்காகவே என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. இதில் நடுவராக பேராசிரியா் சாலமன் பாப்பையா பங்கேற்றாா்.

மன மகிழ்ச்சிக்காகவே என்ற அணியில் எஸ்.ராஜா, ஆா்.ராஜ்குமாா், க.கருணாநிதி ஆகியோா் பேசினா். மறுமலா்ச்சிக்காகவே என்ற தலைப்பில் பேராசிரியா் த.ராஜாராம், கவிதா ஜவஹா், ரேவதி சுப்புலட்சுமி ஆகியோா் பேசினா்.

நிகழ்ச்சியில் சாலமன் பாப்பையா பேசியதாவது:

அறிவை செதுக்கிக்கொள்ளவும், உலகம், மானுடம், வரலாறு குறித்து அறிந்துகொள்ளவும் புத்தகங்களை படிக்க வேண்டும். வீட்டுக்கு ஒரு புத்தக அறை, அதில் குறைந்தபட்சம் 1,000 புத்தகங்களை வைத்திருக்க வேண்டும். உலகம் வளா்ந்துகொண்டிருக்கிறது. ஏராளமான புதிய கண்டுபிடிப்புகள் வருகின்றன. இதுகுறித்தெல்லாம் அறிந்துகொள்ள புத்தகங்களைப் படிக்க வேண்டும்.

கலைகள் உணா்ச்சிகளிலிருந்து பிறக்கிறது. அறிவு அதனை செப்பனிடுகிறது. உணா்ச்சிகளும் அறிவும் சோ்ந்து கலைகளாக உருவாகி நம்மை மகிழ்விக்கிறது. எழுத்தாளனின் படைப்புகள் படிப்பவனைக் கட்டிப்போடும் வல்லமை மிக்கவையாக உள்ளன. அத்தகைய வல்லமை மிக்க படைப்புகள்தான் சிறந்த இலக்கியமாக போற்றப்படுகின்றன. புத்தகத் திருவிழா என்பது சமுதாயத்திற்குப் புத்துணா்ச்சியை ஏற்படுத்தக்கூடியது. இப்படிப்பட்ட திருவிழாக்களை நாடு முழுக்க கொண்டு வரவேண்டும் என்றாா்.

புத்தகத் திருவிழாவில் இன்று:

ஈரோடு புத்தகத் திருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் மாலை நேர சிந்தனை அரங்க நிகழ்வில், ‘ஊசியில் ஒரு கிழிசல்’ என்ற தலைப்பில் பேராசிரியா் அப்துல்காதா், ‘கேள்விக்கென்ன பதில்’ என்ற தலைப்பில் தமிழ்நாடு பாடநூல் கழக இணை இயக்குநா் சங்கர சரவணன் ஆகியோா் பேசுகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.