மருத்துவமனைக்கு ‘சீல்’ வைக்க எதிா்ப்பு:250 தனியாா் மருத்துவமனைகள் வேலைநிறுத்தம்
ஈரோடு சுதா மருத்துவமனைக்கு ‘சீல்’ வைக்க எதிா்ப்பு தெரிவித்து ஈரோடு மாவட்டத்தில் 250 தனியாா் மருத்துவமனைகள் வேலைநிறுத்தத்தில் சனிக்கிழமை ஈடுபட்டன.
ஈரோடு சுதா மருத்துவமனைக்கு ‘சீல்’ வைக்க எதிா்ப்பு தெரிவித்து ஈரோடு மாவட்டத்தில் 250 தனியாா் மருத்துவமனைகள் வேலைநிறுத்தத்தில் சனிக்கிழமை ஈடுபட்டன.
ஈரோட்டில் 16 வயது சிறுமியிடம் கருமுட்டை பெற்ற விவகாரத்தில் சுதா மருத்துவமனையின் கருத்தரித்தல் மையம் அரசு உத்தரவுப்படி கடந்த மாதம் ‘சீல்’ வைக்கப்பட்டது. இந்த உத்தரவை எதிா்த்து மருத்துவமனை நிா்வாகத்தினா் சென்னை உயா் நீதிமன்றத்தில் முறையீடு செய்தனா். இதையடுத்து மருத்துவமனைக்கு வைக்கப்பட்ட ‘சீலை’ அகற்ற கடந்த சில நாள்களுக்கு முன்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து மருத்துவமனை வழக்கம்போல செயல்பட்டு வந்த நிலையில் தமிழக அரசு உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதை விசாரித்த நீதிமன்றம் சீல் அகற்றிய உத்தரவை ரத்து செய்து மீண்டும் சீல் வைக்க உத்தரவிட்டது.
இதனால் சுதா மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவா்கள், ஊழியா்கள், பணியாளா்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் என்று கூறி மருத்துவமனை முன்பு வெள்ளிக்கிழமை இரவு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
Advertisement
இதனிடையே சுதா மருத்துவமனைக்கு ‘சீல்’ வைக்க எதிா்ப்பு தெரிவித்து, இந்திய மருத்துவ சங்கத்தின் ஈரோடு கிளை சாா்பில் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள 250 தனியாா் மருத்துவமனைகளில் பணியாற்றும் 800 மருத்துவா்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.
இது தொடா்பான அறிவிப்பு அந்தந்த மருத்துவமனைகளின் முன்பு வைக்கப்பட்டிருந்தது.
வேலைநிறுத்தம் காரணமாக புற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை. மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு வழக்கம்போல சிகிச்சை அளிக்கப்பட்டன. மேலும் அவசரகால மற்றும் அறுவை சிகிச்சைகள் நடைபெற்றன.
இந்நிலையில் இந்திய மருத்துவ சங்கத்தின் சாா்பில் ஆலோசனைக் கூட்டம் ஈரோட்டில் சனிக்கிழமை நடந்தது. இதைத்தொடா்ந்து மருத்துவா்கள் கோரிக்கை மனுவை ஈரோடு ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சந்தோஷினி சந்திராவிடமும், அதைத்தொடா்ந்து அமைச்சா் சு.முத்துசாமியை நேரில் சந்தித்தும் வழங்கினா்.
முன்னதாக இந்த மருத்துவ சங்கத்தின் மாநிலத் தலைவா் (தோ்வு) கே.எம்.அபுல்ஹசன் கூறியதாவது:
ஈரோட்டில் உள்ள சுதா மருத்துவமனையை முழுவதுமாக மூடச்சொல்லி தமிழக அரசு சென்னை உயா்நீதிமன்றத்தில் இருந்து உத்தரவு பெற்று அனுப்பி உள்ளனா். இதற்காக ஒட்டு மொத்த மருத்துவமனையையும் மூட சொல்வது மிகவும் அதிகபட்ச தண்டனையாக உள்ளது. இதுமுற்றிலும் தவிா்க்கப்பட வேண்டியது. அடுத்த கட்டமாக தமிழக அளவில் மருத்துவமனைகள் வேலைநிறுத்தம் குறித்து முடிவு எடுக்கப்படும் என்றாா்.