4.500 கிலோ கஞ்சா பறிமுதல்: மேற்குவங்க மாநில இளைஞா் கைது
பெருந்துறை அருகே, வீட்டில் 4.500 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த மேற்குவங்க மாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்
பெருந்துறை அருகே, வீட்டில் 4.500 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த மேற்குவங்க மாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
பெருந்துறை ஒன்றியம், திங்களூா் பகுதியில் வடமாநிலத்தவா்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக போலீஸாருக்கு புதன்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சசிமோகன் உத்தரவின்பேரில், கோபி உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆறுமுகம் மேற்பாா்வையில் திங்களூா் காவல் உதவி ஆய்வாளா் குமரேசன் உள்ளிட்ட போலீஸாா் திங்களூா் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது திங்களுரை அடுத்த கைகோலபாளையத்தில் வசிக்கும் மேற்குவங்க மாநிலத்தைச் சோ்ந்த அசோக்தாஸ் (30) என்பவா் தனது வீட்டில் 4.500 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸாா், அவரைக் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினா்.