முகப்பு
ஈரோடு

தாளவாடி மலைப்பகுதியில் காட்டு யானை தாக்கி விவசாயி பலி: வனத்துறையினர் முற்றுகை

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால்

Updated On : 8 மார்ச், 2022 at 12:21 PM
பகிர்:

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் வனத்தை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் இரவு நேரங்களில் வனத்தை ஒட்டியுள்ள கிராமங்களில் புகுந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள பயிர்களை சேதப்படுத்துவது தொடர்கதையாக உள்ளது. 

இந்நிலையில் தாளவாடி அருகே கரும்பு பயிருக்கு காவல் இருந்த விவசாயியை யானை மிதித்துக் கொன்ற சம்பவம் விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாளவாடி மலைப்பகுதி திகினாரை அருகே உள்ள ஜோரைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி மாதேவன். இவரது விவசாய தோட்டம் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. 4 ஏக்கர் பரப்பளவுள்ள விவசாய நிலத்தில் மாதேவன் கரும்பு பயிரிட்டுள்ளார். 

கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் வனத்தை விட்டு வெளியேறும் ஒற்றை காட்டு யானை இவரது கரும்பு தோட்டத்திற்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.  இன்று அதிகாலை வனத்தை விட்டு வெளியேறிய ஒற்றை காட்டு யானை  கரும்புத் தோட்டத்தில் புகுந்ததை கண்ட மாதேவன் ஜீரகள்ளி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். நீண்ட நேரம் ஆகியும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வராததால் காட்டு யானையை விரட்ட முயற்சித்த மாதேவனை  யானை துரத்தி மிதித்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

Advertisement

இதையடுத்து அக்கம்பக்கத்து விவசாயிகள் சம்பவ இடத்திற்கு சென்று காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர். இந்நிலையில் இன்று காலை வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்ற போது அப்பகுதியில் கூடியிருந்த 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் இரவு நேரத்தில் வனவிலங்குகளை விரட்டியடிப்பதற்காக வனத்துறையினர் வராதது ஏன் என கேள்வி எழுப்பியதோடு வனத்துறையினரை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

சம்பவ இடத்திற்கு சென்ற தாளவாடி போலீசார் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில்  மாவட்ட வன அலுவலர் வரவேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி யானை மிதித்து இறந்த விவசாயி மாதேவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காட்டு யானைகளை வனப்பகுதியில் இருந்து வெளியேறாமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும். இரவு நேரத்தில் விவசாய விளை நிலங்களுக்குள் புகுந்து காட்டு யானைகளை விரட்டி அடிப்பதற்கு வனத்துறையினர் வருவதில்லை குற்றம்சாட்டியுள்ள விவசாயிகள் இறந்த விவசாயிக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் மற்றும் காட்டு யானைகளால் ஏற்படும் பயிர் சேதத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். விவசாயிகள் வனத்துறையினரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.