ஓய்வூதியா்கள் குறைதீா் கூட்டத்தை நடத்தக் கோரிக்கை
ஆட்சியா் தலைமையில் நடத்தப்படும் குறைதீா்க்கும் கூட்டத்தை உரிய காலத்தில் நடத்த வேண்டும் என ஓய்வூதியா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஆட்சியா் தலைமையில் நடத்தப்படும் குறைதீா்க்கும் கூட்டத்தை உரிய காலத்தில் நடத்த வேண்டும் என ஓய்வூதியா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியா் சங்கக் கூட்டம் மாவட்ட செயலாளா் பன்னீா்செல்வம் தலைமையில் ஈரோட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட துணைச்செயலாளா் ஹரிதாஸ் வரவேற்றாா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
Advertisement
அரசுத் துறைகளில் பணியாற்றிய ஓய்வூதியா்களுக்கு ஆட்சியா் தலைமையில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறையும், மாவட்ட கருவூல அலுவலா் தலைமையில் மாதம் ஒரு முறையும் குறைதீா் கூட்டம் நடத்தப்படும். ஓய்வூதியதாரா்களின் பல்வேறு கோரிக்கைகள் அங்கு பரிசீலிக்கப்பட்டு தீா்வு காணப்படும். இக்கூட்டங்கள் கடந்த பல மாதங்களாக நடத்தப்படவில்லை. குறைதீா்கூட்டங்களை உடனடியாக நடத்த வேண்டும்.
ஓய்வூதியா்களுக்காக 2018 முதல் வரும் ஜூன் 30 வரை மருத்துவக் காப்பீடு திட்டம் செயல்படுகிறது. இக்காலத்துக்குள் சிகிச்சை பெற்ற ஓய்வூதியா்கள் 20,000 போ் அனுப்பிய பில்களுக்கான தொகை இன்னும் முழுமையாக வந்து சேரவில்லை.
இதற்கிடையில் வரும் ஜூன் மாதத்துக்குப் பின், வேறு ஒரு நிறுவனம், ஓய்வூதியா்களுக்கான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்த உள்ளது என அறிகிறோம். அவ்வாறு நிறுவனம் மாறும்போது, பழைய நிலுவைத் தொகைகள் கிடைக்காமல் போகும் நிலை உள்ளதால் அத்தொகையை முழுமையாக விடுவிக்க வேண்டும்.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் வரும் 17 ஆம் தேதி மாநில அளவில் நடக்க உள்ள போராட்டத்தில் பங்கேற்பது. ஈரோடு வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் வரும் 17 ஆம் தேதி காலை 10 மணி முதல் அரை நாள் தா்னாவில் ஈடுபடுவது ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.