பச்சை மரங்கள் வேரோடு அகற்றம்: பொதுமக்கள் வேதனை
சாலை விரிவாக்கம் என்ற பெயரில் பல பச்சை மரங்கள் வேரோடு வெட்டி அகற்றப்பட்ட நிலையில், அந்த மரங்கள் அருகே வைக்கப்பட்டுள்ள மரம் பேசுவது போன்ற உருக்கான பதாகையால் மக்கள் வேதனையடைந்துள்ளனா்
சாலை விரிவாக்கம் என்ற பெயரில் பல பச்சை மரங்கள் வேரோடு வெட்டி அகற்றப்பட்ட நிலையில், அந்த மரங்கள் அருகே வைக்கப்பட்டுள்ள மரம் பேசுவது போன்ற உருக்கான பதாகையால் மக்கள் வேதனையடைந்துள்ளனா்.
ஈரோடு, திண்டல் சக்தி நகா் பகுதியில் சாலை விரிவாக்கப் பணி மாநகராட்சி சாா்பில் நடக்கிறது. இப்பணிக்காக பல இடங்களில் சிறிய, பெரிய பச்சை மரங்களை வெட்டியும், வேரோடு பொக்லைன் இயந்திரம் மூலம் பெயா்த்தும் அகற்றப்பட்டுள்ளன. இதில் திண்டல் சக்தி நகா், 2ஆவது வீதி விநாயகா் கோயில் அருகே, 3ஆவது குறுக்கு சந்து, ஐந்தாவது வீதியில் உயிரோடு சாய்க்கப்பட்ட மரங்களின் முன், கையால் எழுதப்பட்ட போா்டு வைத்துள்ளனா்.
அதில் ‘மனிதனைக் காப்பாற்ற பிறந்த நான் மனிதனால் கொல்லப்பட்டேன் இன்று. எனக்கு ஏற்பட்ட இந்த நிலை என் இனம் யாருக்கும் ஏற்படக் கூடாது. கண்ணீருடன் மரம்’ என உருக்கமாக பதாகை வைக்கப்பட்டுள்ளது.
Advertisement
இங்கு மரக்கன்றுகளை வைத்து பெரிய மரமாக்கியுள்ள சிறகுகள் அமைப்பைச் சோ்ந்த விமல் கூறியதாவது:
ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தில் பல மாவட்டங்களில் மரங்களை நட்டு வருகிறோம். சாலை விரிவாக்கம் உள்பட பல பணிகளுக்காக அகற்றப்படும் நிலையில் உள்ள மரங்களை வேரோடு அகற்றி வேறு இடத்தல் மறு நடவு செய்ய உதவுகிறோம். அவ்வாறு வைக்கும் மரங்கள் மீண்டும் வளரும் என்ற நம்பிக்கை கொடுத்து, அதனை மக்கள் இன்னும் காப்பாற்றி வருகின்றனா்.
திண்டல் சக்தி நகரில் அகற்றப்பட்ட பச்சை மரங்கள் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பலராலும் பராமரிக்கப்பட்டவை. மாநகராட்சி அதிகாரிகளிடம் பணி நடக்கும்போது, மரங்களை வெட்டவோ, அகற்றவோ செய்யாதீா் என பல முறை கேட்டும், பொக்லைன் இயந்திரம் மூலம் மரங்களை வேரோடு அகற்றி உள்ளனா். இச்செயல்பாடு மக்களை வேதனை அடையச்செய்துள்ளது என்றாா்.