முகப்பு
ஈரோடு

ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் இன்று கலந்து கொண்டனர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:16 AM
பகிர்:

ஈரோடு: ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் இன்று கலந்து கொண்டனர்.

ஈரோடு கோட்டை பகுதியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 1,200 ஆண்டுகள் பழமையான பிரசித்தி பெற்ற கோட்டை ஈஸ்வரன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 800 ஆண்டுகள் பழமையான வன்னி மரம், நடராஜர், 63 நாயன்மார்கள், சனி பகவான், காலபைரவர் சந்திரன் உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் உள்ளன.

இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி தேரோட்டம். குரு பெயர்ச்சி விழா, 63 நாயன்மார்கள் குருபூஜை ஆகவே வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த கோவிலின் கும்பாபிஷேக திருப்பணிகள் கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கியது.

இதில் விமான கோபுரங்களுக்கும், சிற்பங்களுக்கும் வர்ணம் பூசும் பணி, தரைத்தளம் செட் பணியிடுதல், ஆகம விதிப்படி கருவறை சிற்பங்கள், சிலைகள் மாற்றம் செய்யாமல் புதுப்பிக்கும் பணி, கொடி மரத்திற்கு தங்க முலாம் பூசிய தகடுகள் பொருத்தும் பணி, கோபுர கலசத்திற்கு தங்க முலாம்பூசும் பணிகள், அன்னதான கூடம், வாகன மடம், வசந்த மடம் போன்றவற்றை புரணமைக்கும் பணிகள் நடந்தது.

இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்து கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த மாதம் 31ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. கும்பாபிஷேகத்தை ஒட்டி கோவில் வளாகத்தில் முகூர்த்தக்கால் (பாலக்கால்) நடப்பட்டது. இதைத் தொடர்ந்து ஒவ்வொரு நாள் சிறப்பு பூஜைகள், கால யாக பூஜைகள் நடைபெற்று வருகின்றன. கும்பாபிஷேகத்தை யொட்டி ஈஸ்வரன் கோவிலில் பிரம்மாண்ட யாகசாலைகள் அமைக்கப்பட்டு தினமும் யாகம் வளர்க்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் இன்று காலை நடந்தது. இன்று அதிகாலை 5.30 மணி அளவில் 8-ம்  கால யாக பூஜை நடைபெற்றது. கும்பாபிஷேகத்திற்கு ஈரோடு மட்டுமின்றி சேலம், நாமக்கல், கோவை மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேகத்தை காண திரண்டனர்.  இதைத் தொடர்ந்து விமான ராஜ கோபுரங்களுக்கு, பரிவார மூர்த்தங்களுக்கும், கபாலீஸ்வரர் சுவாமிக்கும் புனித நீர் கலசத்தில் தெளிக்கப்பட்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது. அப்போது கூடியிருந்த மக்கள் எழுப்பிய கோஷம் விண்ணை தொடும் அளவுக்கு அதிர்ந்தது.

விழாவில் சரஸ்வதி எம்.எல்.ஏ, மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. கே. எஸ். தென்னரசு, முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், கவுன்சிலர் பழனியப்பா செந்தில்குமார், இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கும்பாபிஷேகத்தை தொடர்ந்து பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று மாலை மகா அபிஷேகம் தீபாராதனை கல்யாண உற்சவம் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா நடைபெறுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →