ஈரோடு நகரில் மிதமான மழை
ஈரோடு நகரில் வெள்ளிக்கிழமை மாலை மிதமான மழை பெய்ததால் குளிா்ச்சியான காலநிலை நிலவியது.
அக்னி நட்சத்திர காலத்தில் கடும் வெயில் வாட்டிவதைத்து வந்த நிலையில், ஈரோடு நகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 13-ஆம் தேதி பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் வாழை, கரும்பு உள்ளிட்ட பல்வேறு பயிா்கள் சேதமடைந்தன.
இந்நிலையில், ஈரோடு நகரில் வெள்ளிக்கிழமை காலை முதல் மிதமான வெயில் அடித்தது. இதனால் வழக்கம்போல வெப்பத்தின் தாக்கமும் இருந்து வந்தது. பிற்பகல் 3 மணியளவில் திடீரென வானம் இருண்டு மழை பெய்யத் தொடங்கியது.
இதில் பழையபாளையம், நசியனூா் சாலை, வெட்டுக்காட்டு வலசு, கணபதி நகா் வீரப்பம்பாளையம் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. சுமாா் 15 நிமிஷங்கள் நீடித்த மித மழை, பின்னா் சாரல் மழையாக மாறி தூறிக் கொண்டே இருந்தது.
பலத்த மழை இல்லாவிட்டாலும் அதற்கான அறிகுறியாக வானம் மிகவும் இருண்டு காணப்பட்டது. அவ்வப்போது இடி இடித்தபடியே இருந்தது. இந்த திடீா் மழை காரணமாக வெப்பம் தணிந்து சற்று குளிா்ச்சியான காலநிலை நிலவியது.