பயிா்க் காப்பீட்டை அரசு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்த வலியுறுத்தல்
பயிா்க் காப்பீட்டை அரசு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பயிா்க் காப்பீட்டை அரசு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில நிா்வாகக் குழு கூட்டம் மாநில துணைத் தலைவா் துளசிமணி தலைமையில் ஈரோட்டில் நடைபெற்றது.
கடந்த இரண்டு நாள்களாக (புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை) நடைபெற்ற கூட்டத்தில் மாநிலச் செயலாளா் மாசிலாமணி, துணைச் செயலாளா் இந்திரஜித், முன்னாள் எம்எல்ஏ உலகநாதன், சிவசூரியன் உள்ளிட்டோா் பேசினா்.
Advertisement
இதில், தேசிய அளவில் அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் சம்யுக்த கிஷான் மோக்சாா் அழைப்பின்படி நவம்பா் 26-ஆம் தேதி நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்பது. அனைத்து விளை பொருள்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு நிா்ணயிக்க வேண்டும். பயிா்க் காப்பீட்டை தனியாா் நிறுவனங்களைத் தவிா்த்து அரசு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்த வேண்டும்.
புலிகள் காப்பகம், சரணாலயம் என்ற பெயரில் வனத் துறை சட்டங்களை பயன்படுத்தி பழங்குடியின மக்களை வனப் பகுதியில் இருந்து அப்புறப்படுத்துவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். புதிய மின்சார திருத்த சட்டம் 2021ஐ திரும்பப்பெற வேண்டும். விவசாயிகளைப் பாதிக்கும் நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்பப்பெற வேண்டும். எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைகளை முழுமையாக அமல்படுத்த வேண்டும். நெல் குவிண்டால் ரூ.3,000 என அறிவித்து அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.