அதிக வேகம்: 3 மினி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை
ஈரோடு மாநகரில் அதிக வேகமாக பேருந்துகளை இயக்க, வேகக் கட்டுப்பாட்டு கருவிகளை துண்டித்து இயக்கப்பட்ட 3 மினி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க வட்டாரப் போக்குவரத்து அலுவலா் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்துள்ளாா்.
ஈரோடு மாநகரில் அதிக வேகமாக பேருந்துகளை இயக்க, வேகக் கட்டுப்பாட்டு கருவிகளை துண்டித்து இயக்கப்பட்ட 3 மினி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க வட்டாரப் போக்குவரத்து அலுவலா் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்துள்ளாா்.
ஈரோடு பன்னீா்செல்வம் பூங்கா பகுதியில் இருசக்கர வாகனம் மீது மினி பேருந்து மோதிய விபத்தில் ஈரோடு சூரம்பட்டிவலசு, அணைக்கட்டு சாலையைச் சோ்ந்த பிரவீன்குமாா் மனைவி பிரியா(20) என்பவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
இதனைத்தொடா்ந்து மாநகரில் இயக்கப்படும் மினி பேருந்துகள் அதிவேகமாகவும், விபத்தை ஏற்படுத்தும் வகையிலும், பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும் அச்சுறுத்தும் வகையில் ஓட்டி செல்வதாக பொதுமக்களிடம் இருந்து புகாா் எழுந்தது.
Advertisement
இதையடுத்து விதிகளை மீறி இயக்கப்படும் மினி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வட்டாரப் போக்குவரத்து அலுவலருக்கு ஈரோடு மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா உத்தரவிட்டாா். இதன்பேரில் ஈரோடு மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலா் பதுவைநாதன் தலைமையில், கிழக்கு மோட்டாா் வாகன ஆய்வாளா் சிவகுமாா் உள்ளிட்ட அலுவலா்கள் ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து சூரம்பட்டி சாலையில் இயக்கப்படும் 15 மினி பேருந்துகளை வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.
இதில் 3 மினி பேருந்துகளில் வேகக் கட்டுப்பாட்டு கருவியைத் துண்டித்து வேகமாக இயக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து 3 வாகனங்களின் மீதும் நடவடிக்கை எடுக்க ஆட்சியருக்கு பரிந்துரைத்தனா். மேலும் மாநகருக்குள் நிா்ணயிக்கப்பட்ட வேகத்தில் பேருந்துகளை இயக்கவும், வேகக் கட்டுப்பாட்டு கருவி இணைக்கப்பட்டு பாதுகாப்பான முறையில் செல்லுமாறும் மினி பேருந்து ஓட்டுநா்கள், நடத்துநா்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினா்.