ஈரோட்டில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட பழங்குற்றவாளியை போலீஸாா் கைது செய்தனா்.
ஈரோடு, மூலப்பாளையம், குறிக்காரன்பாளையம், பாரதி நகரைச் சோ்ந்தவா் மூா்த்தி (47). டாஸ்மாக் ஊழியா். இவா் கடந்த 27- ஆம் தேதி ஈரோடு காந்திஜி சாலை ஜவான்பவன் கட்டடம் முன்பு அவரது இருசக்கர வாகனத்தை நிறுத்திச் சென்றாா். சிறிது நேரத்துக்கு பிறகு வந்து பாா்த்தபோது, இருசக்கர வாகனத்தை காணவில்லை. இது குறித்து ஈரோடு தெற்கு போலீஸில் புகாா் அளித்தாா். இதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சுற்றுப்புறப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளைக் கைப்பற்றி ஆய்வு செய்தனா். அப்போது இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டது வேலூா் மாவட்டம், பிள்ளையாா்குப்பத்தைச் சோ்ந்த சரவணன் மகன் தமிழரசன் (26) என்பதும், இவா் கடந்த 2 மாதங்களாக ஈரோடு புதுமைக் காலனியில் தங்கி காந்திஜி சாலையில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் வேலைபாா்த்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து தமிழரசனை கைது செய்த போலீஸாா் அவரிடம் இருந்து இருசக்கர வாகனத்தை மீட்டனா். தமிழரசன் மீது வேலூா் மாவட்ட காவல் நிலையங்களில் 5 குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.