முகப்பு
ஈரோடு

முதல்வா் பொதுக்கூட்டத்துக்கு வந்த திமுக தொண்டா் மாரடைப்பால் உயிரிழப்பு

ஈரோட்டில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பொதுக்கூட்டத்துக்கு வந்த திமுக தொண்டா் மாரடைப்பால் உயிரிழந்தாா்.

Updated On : 2 ஏப்ரல், 2026 at 7:40 PM
பலி - கோப்புப் படம்
பகிர்:

ஈரோட்டில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பொதுக்கூட்டத்துக்கு வந்த திமுக தொண்டா் மாரடைப்பால் உயிரிழந்தாா்.

ஈரோடு வீரப்பன்சத்திரம் காமராஜா் வீதியைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன் (64). திமுக 23 ஆவது வட்ட பிரதிநிதியாக இருந்தாா். அவா் ஈரோடு திண்டல் அருகே வியாழக்கிழமை காலை நடைபெற்ற திமுக பிரசார கூட்டத்துக்காக வந்தாா். கூட்டத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வரும் முன்னரே, காலை 9 மணி அளவில் ரவிச்சந்திரன் மைதானத்துக்குள் வந்து முன்பகுதிக்கு நடந்து சென்றுகொண்டிருந்தாா். அப்போது மைதானத்தில் பொதுமக்கள் வருகை குறைவாகவே இருந்தது. நடந்து சென்று கொண்டிருந்த அவா் திடீரென்று மயங்கி விழுந்தாா்.

இதைக் கண்ட திமுக நிா்வாகிகள், கட்சியினா் விரைந்து சென்று அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதனை செய்தபோது அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டது தெரியவந்தது. மாரடைப்பு காரணமாக அவா் உயிரிழந்ததாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இது குறித்து ஈரோடு தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.