கோபியில் தவெக வேட்பாளா் செங்கோட்டையன் வேட்புமனு ஏற்பு!
நிறுத்திவைக்கப்பட்ட கே. ஏ. செங்கோட்டையன் வேட்புமனு பரிசீலனைக்குப் பிறகு ஏற்பு
கோபி சட்டப் பேரவைத் தொகுதியில் நிறுத்திவைக்கப்பட்ட தவெக வேட்பாளா் கே. ஏ. செங்கோட்டையன் வேட்புமனு பரிசீலனைக்குப் பிறகு ஏற்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம், கோபி தவெக வேட்பாளராக அக்கட்சியின் மாநில நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கே. ஏ. செங்கோட்டையன் போட்டியிடுகிறார். அவர் கடந்த மார்ச் 30 வேட்புமனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில், கோபியில் செங்கோட்டையன் கட்டியுள்ள புதிய வீட்டுக்கு வருமான வரி செலுத்தவில்லை எனவும் உரிமம் முடிந்த நோட்டரி வழக்கறிஞர் அளித்த சான்றிதழ்களை ஏற்கக் கூடாது எனவும் அதிமுகவினர் புகார் அளித்த நிலையில் அவரது வேட்புமனு மீதான பரிசீலனை நிறுத்திவைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. மாலை 5 மணிக்குள் செங்கோட்டையன் தரப்பில் விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டதாகவும் கூறப்பட்டது.
Advertisement
அதனைத்தொடர்ந்து, தீவிர பரிசீலனைக்குப்பிறகு செங்கோட்டையனின் வேட்புமனு ஏற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. கோபி தொகுதியில் அதிமுக சாா்பில் 8 முறை போட்டியிட்டு வெற்றிபெற்ற செங்கோட்டையன், அக்கட்சியில் இருந்து விலகி தவெகவில் இணைந்த பின் கோபி தொகுதியில் 9 -ஆவது முறையாக களம் காணவுள்ளாா்.