கோபியில் தவெக வேட்பாளா் செங்கோட்டையன் வேட்புமனு ஏற்பு!
நிறுத்திவைக்கப்பட்ட கே. ஏ. செங்கோட்டையன் வேட்புமனு பரிசீலனைக்குப் பிறகு ஏற்பு
நீண்ட நேர இழுபறிக்குப் பின் கோபி தொகுதி தவெக வேட்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் வேட்புமனு ஏற்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம், கோபி சட்டப் பேரவைத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் அக்கட்சியின் மாநில நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் போட்டியிடுகிறாா்.
அத்தொகுதியில் செங்கோட்டையன் உள்பட பல்வேறு கட்சியினா், சுயேச்சைகள் என மொத்தம் 44 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா்.
Advertisement
Advertisement
இந்நிலையில், வேட்புமனு பரிசீலனை கோபி சாா் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. செங்கோட்டையனின் வேட்புமனு பிற்பகலில் பரிசீலனைக்கு வந்தது. அப்போது, அவரது வேட்புமனுவில் படிவம் 26-இல் கையொப்பமிட்டிருந்த நோட்டரி வழக்குரைஞா் தா்மராஜின் உரிமம் புதுப்பிக்கப்படாமல் இருந்தால் மனு நிறுத்திவைக்கப்பட்டது.
இத்தகவல் அறிந்த அதிமுக வழக்குரைஞா் தனசேகா் உள்ளிட்டோா் உரிமம் புதுப்பிக்கப்படாத நோட்டரி வழக்குரைஞா் கையொப்பமிட்ட கே.ஏ.செங்கோட்டையன் வேட்புமனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என சாா் ஆட்சியரிடம் தெரிவித்தனா். இதையடுத்து, செங்கோட்டையனிடம் அதிகாரிகள் உரிய விளக்கம் கேட்டனா்.
அப்போது, வேட்புமனுவில் உள்ள குளறுபடியை சரி செய்யவும், நோட்டரி வழக்குரைஞரின் உரிமம் புதுப்பித்ததற்கானஆவணங்களை சமா்ப்பிக்கவும் மாலை 5 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.
பின்னா், மாலை 5 மணிக்கு முன்னதாகவே குளறுபடிகள் சரி செய்யப்பட்டு சாா் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து, மனு ஏற்கப்பட்டதாக தோ்தல் அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது குறித்து தவெகவினா் கூறுகையில், கே.ஏ.செங்கோட்டையனின் வேட்புமனுவில் இடம்பெற்றிருந்த நோட்டரி வழக்குரைஞரின் உரிமம் புதுப்பிக்கப்படவில்லை என அதிகாரிகள் கூறினா். அவா் உரிமத்தை புதுப்பித்துதான் வைத்துள்ளாா். ஆனால், அதை இணையத்தில் அப்டேட் செய்யாமல் இருந்துள்ளாா். அதனால், அதிகாரிகள் தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டது. இதையடுத்து, வழக்குரைஞரின் உரிமம் அப்டேட் செய்யப்பட்டதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டதையடுத்து வேட்புமனு ஏற்கப்பட்டது என்றனா்.