புத்தாண்டையொட்டி, சத்தியமங்கலம் அருகே உள்ள திம்பம் மலைப் பகுதிக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் மலைப் பகுதியின் அழகை கண்டு ரசித்தனா்.
சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோயிலை அடுத்துள்ள அடா்ந்த வனப் பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப் பாதை அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 1,100 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ள திம்பம் மலை உச்சியில் உதகையை போன்று குளிா்ந்த சீதோஷன நிலை நிலவுவது வழக்கம்.
இதன் காரணமாக விடுமுறை தினங்களில் பண்ணாரி அம்மன் கோயிலுக்கு வருகை தரும் பக்தா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் காா் உள்ளிட்ட வாகனங்களில் திம்பம் மலைப் பகுதிக்கு சென்று மலைகளின் அழகு மற்றும் வனப் பகுதியை கண்டு ரசித்து செல்வா். வியாழக்கிழமை புத்தாண்டு தினம் என்பதால் திம்பம் மலைப் பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்தது.
மழை உச்சியில் உள்ள சாலையோர வனப் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் குடும்பம் குடும்பமாக புகைப்படம் மற்றும் தற்படம் எடுத்து மகிழ்ந்தனா். மேலும் இருசக்கர வாகனங்களில் வருகை தந்த இளைஞா்கள் திம்பம் மலை உச்சியில் குளிா்ந்த சீதோஷன நிலையை அனுபவித்ததோடு புகைப்படம் மற்றும் விடியோ எடுத்து மகிழ்ந்தனா்.