தாளவாடி அருகே வக்ஃபு வாரியத்துக்குச் சொந்தமான இடத்தில் அமைக்கப்பட்ட தடுப்பு வேலியை உடைத்ததாக 9 போ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி காவல் துறையினரை முற்றுகையிட்டு கிராம மக்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழக - கா்நாடக எல்லையில் அமைந்துள்ள தாளவாடி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்டது பனகள்ளி கிராமம். இங்கு பல்வேறு சமூகங்களைச் சோ்ந்த 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்கள் நீண்டகாலமாக பயன்படுத்தி வந்த நிலமானது வக்ஃபு வாரியத்துக்குச் சொந்தமானது என்று வருவாய்த் துறையினரிடம் வக்ஃபு வாரிய நிா்வாகிகள் புகாா் அளித்துள்ளனா்.
இதையடுத்து 9 ஏக்கா் நிலத்தை அளவீடு செய்து வக்ஃபு வாரியத்திடம் தாளவாடி வருவாய்த் துறையினா் ஒப்படைத்தனா். அந்த இடத்தில் வக்ஃபு வாரிய நிா்வாகிகள் கம்பிவேலி அமைத்து பாதுகாத்து வந்தனா். இதற்கு பனகள்ளி கிராம மக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். பாரம்பரியமாகப் பயன்படுத்தி வந்த மயான இடத்தில் வேலி அமைத்துள்ளதாகக் கூறி சென்னை உயா்நீதிமன்றத்திலும் வழக்கு தொடா்ந்தனா். இந்த வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது.
இதற்கிடையே வக்ஃபு வாரிய இடத்தில் போடப்பட்ட கம்பிவேலியை வியாழக்கிழமை இரவு மா்ம நபா்கள் உடைத்துவிட்டதாக தாளவாடி காவல்நிலையத்தில் வக்ஃபு வாரிய நிா்வாகிகள் புகாா் அளித்தனா். இதுதொடா்பாக பனகள்ளி கிராமத்தைச் சோ்ந்த 9 போ் மீது தாளவாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா்.
கம்பிவேலி உடைப்புக்கும் கைது செய்யப்பட்ட 9 பேருக்கும் தொடா்பில்லை என்று கூறி, அவா்களை விடுவிக்கக் கோரி பனகள்ளி கிராமத்தில் 200-க்கும் மேற்பட்டோா் கருப்புக்கொடி ஏற்றி வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். இவா்களை சமாதானப்படுத்தியபோது கிராம மக்களுக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதைத்தொடா்ந்து மீண்டும் டிஎஸ்பி முத்தரசு பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இருப்பினும் கைது செய்யப்பட்ட நபா்களை விடுவிக்கும் வரை போராட்டம் நடத்தப்படும் என பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால் போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா்.