மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து முதல் கட்ட பயிற்சி
2027-ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடா்பாக தொழில்நுட்ப உதவியாளா்களுக்கான முதல் கட்ட பயிற்சி ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
பயிற்சியை தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி பேசியதாவது: மக்கள் தொகை கணக்கெடுப்பு கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்றது. கணக்கெடுப்பானது 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை எடுக்கப்பட்டு வருகிறது. 2021-ஆம் ஆண்டு கரோனா நோய்த் தொற்று காரணமாக கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. இந்தக் கணக்கெடுப்பானது அடுத்த 10 ஆண்டுகளுக்கு மக்களுக்கு தேவையான அடிப்படை திட்டங்களை தயாரித்து செயல்படுத்த உதவுகிறது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு முற்றிலும் டிஜிட்டல் தொழில்நுட்ப முறையில் நடைபெறவுள்ளது. கைப்பேசி செயலி மூலம் தரவுகள் சேகரிக்கப்படும். மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு 18 மாதங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இன்றைய தினம் 67 தொழில்நுட்ப உதவியாளா்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. இப்பயிற்சி எடுத்துக்கொண்டு நீங்கள் கணக்கெடுப்பவா்களுக்கு முறையாக பயிற்சியளித்து, துல்லியமான முறையில் கணக்கெடுப்பு செய்திட வேண்டும் என்றாா்.
தமிழ்நாடு மக்கள் தொகை கணக்கெடுப்பு உதவி இயக்குநா்கள் பிஜி, ஆகாஷ் தியாகி ஆகியோா் தொழில்நுட்ப உதவியாளா்களுக்கு கணக்கெடுப்பு குறித்து பயிற்சி அளித்தனா்.
பயிற்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தகுமாா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் தேன்மொழி, தனித்துணை ஆட்சியா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) செல்வராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.