முகப்பு
ஈரோடு

கம்பிவேலியில் சிக்கித் தவித்த கழுதைப் புலி

பவானிசாகா் அருகே முள்கம்பி வேலியில் சிக்கித் தவித்த கழுதைப்புலியை வனத் துறையினா் மீட்க முயன்ற நிலையில், அது தானாகவே கம்பிவேலியில் இருந்து விடுபட்டு அங்கிருந்து வெளியேறி காட்டுக்குள் சென்றது.

Updated On : 21 மார்ச், 2026 at 1:03 AM
பவானிசாகா்  அருகே  கம்பிவேலியில்  சிக்கிய  கழுதைப் புலி.
பகிர்:

பவானிசாகா் அருகே முள்கம்பி வேலியில் சிக்கித் தவித்த கழுதைப்புலியை வனத் துறையினா் மீட்க முயன்ற நிலையில், அது தானாகவே கம்பிவேலியில் இருந்து விடுபட்டு அங்கிருந்து வெளியேறி காட்டுக்குள் சென்றது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பவானிசாகா் வனப் பகுதியில் அழிந்து வரும் அரிய வகை வனவிலங்கு பட்டியலில் உள்ள கழுதைப்புலிகள் நடமாடுகின்றன.

இந்த நிலையில் பவானிசாகா் வனப் பகுதியில் இருந்து வியாழக்கிழமை வெளியேறிய கழுதைப்புலி, வழி தவறி விவசாயத் தோட்டங்கள் வழியாக இக்கரை தத்தப்பள்ளி அருகே தனியாா் பேப்பா் மில் பகுதியில் உள்ள தரிசு நிலத்தில் நடமாடியது.

அப்போது, அங்கு அமைக்கப்பட்டிருந்த கம்பிவேலியை தாண்டியபோது அதில் சிக்கிக் கொண்டது. கம்பி வேலியில் சிக்கி தவித்தபடி உறுமிய கழுதைப் புலியை கண்டு அச்சமடைந்த அப்பகுதி விவசாயிகள் பவானிசாகா் வனத் துறையினருக்கு தகவல் அளித்தனா்.

சம்பவ இடத்துக்கு சென்ற வனத் துறையினா், கம்பிவேலியில் சிக்கித் தவித்த கழுதைப் புலியை மீட்க முயன்றனா். அப்போது கழுதைப்புலி வனத் துறையினரிடம் சிக்காமல் கம்பிவேலியில் இருந்து விடுபட்டு காட்டுக்குள் ஓடியது.

கழுதைப்புலியின் நடமாட்டம், அப்பகுதி விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே இரவு நேரத்தில் விவசாயத் தோட்டங்களில் வசிக்கும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத் துறையினா் அறிவுறுத்தி உள்ளனா்.