உதகையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தேதி மீண்டும் மாற்றம்
நீலகிரி மாவட்டத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவதற்கான தேதி 6 ஆவது முறையாக மீண்டும் மாற்றப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவதற்கான தேதி 6 ஆவது முறையாக மீண்டும் மாற்றப்பட்டுள்ளது.
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா, அரசு விழாவாக அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டு, பல்வேறு மாவட்டங்களிலும் கொண்டாடப்பட்டுள்ளது. தமிழக அரசியலில் ஏற்பட்ட மாற்றங்கள், பருவ மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் என பல்வேறு காரணங்களால் நீலகிரி மாவட்டம், உதகையில் கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தேதியில் மாற்றம் செய்யப்பட்டு, பின்னர் 11ஆம்
தேதி நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருந்தது.
அதையடுத்து, செப்டம்பர் 26-ஆம் தேதிக்கு இவ்விழா ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அக்டோபர் 9-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டு, டிசம்பர் 7ஆம் தேதி நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருந்தது.
5ஆவது முறையாக டிசம்பர் 7ஆம் தேதிக்கு மாற்றப்பட்ட இவ்விழா, டிசம்பரில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் முதலாண்டு நினைவு தினம் வருவதாலும் , நிர்வாக காரணங்களாலும் 6-ஆவது முறையாக எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா டிசம்பர் 10ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், இதற்கான ஒப்புதலை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், உள்ளாட்சித் துறை அமைச்சரும், நீலகிரி மாவட்டப் பொறுப்பு அமைச்சருமான எஸ்.பி.வேலுமணியும் அளித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விழாவை உதகை அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் நடத்துவதற்குப் பதிலாக ஏற்கெனவே திட்டமிட்டபடி உதகை குதிரைப்பந்தய மைதானத்திலேயே நடைபெறும் என்றும், இதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் மாநிலங்களவை உறுப்பினரும், நீலகிரி மாவட்டச் செயலாளருமான கே.ஆர்அர்ஜுனன் தெரிவித்துள்ளார்.