காட்டெருமை தாக்கியதில் விடுதி காவலாளி படுகாயம்
உதகையில் காட்டெருமை தாக்கியதில் தனியார் விடுதி காவலாளி ஒருவர் படுகாயமடைந்தார்.
உதகையில் காட்டெருமை தாக்கியதில் தனியார் விடுதி காவலாளி ஒருவர் படுகாயமடைந்தார். அவர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
உதகை வடக்கு வனச்சரகத்துக்கு உள்பட்ட தொட்டபெட்டா பகுதியிலுள்ள தனியார் விடுதியில் காவலாளியாகப் பணியாற்றி வருபவர் தேக் பகதூர் (70). அவர் திங்கள்கிழமை அதிகாலை 5 மணியளவில் தங்கும் விடுதியில் காவல் பணியில் இருந்தபோது அங்கு வந்த காட்டெருமைக் கூட்டத்திலிருந்த ஒரு காட்டெருமை திடீரென அவரை கடுமையாகத் தாக்கியது.
இதில் அவருக்கு கால் முறிவுடன், தலை, தொடை பகுதிகளிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டன. அவரது அலறல் கேட்டு விடுதியிலிருந்து வந்தவர்கள் அந்த காட்டெருமைக் கூட்டத்தை விரட்டியுள்ளனர். பின்னர் அவரை உதகை அரசு தலைமை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிசிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதிக்கு வந்த வனத் துறையினர்அங்கிருந்த காட்டெருமைக் கூட்டத்தை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.