முகப்பு
நீலகிரி

காலியாக உள்ள மின்வாரியக் குடியிருப்புகளை ஏழை மக்களுக்கு வாடகைக்கு விடலாமே?

மஞ்சூர் அருகே காலியாகவுள்ள மினவாரியக் குடியிருப்புகளை ஏழை மக்களுக்கு வாடகைக்கு விடுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

Updated On : 4 செப்டம்பர், 2018 at 1:16 AM
பகிர்:

மஞ்சூர் அருகே காலியாகவுள்ள மினவாரியக் குடியிருப்புகளை ஏழை மக்களுக்கு வாடகைக்கு விடுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
மஞ்சூர் அருகே குந்தா, கெத்தை, அவலாஞ்ஜி, காட்டுக்குப்பை ஆகிய இடங்களில் நீர் மின் நிலையங்கள் இயங்கி வருகின்றன.  மேல் பவானி,  எமரால்டு ஆகிய பகுதிகளில் மின் வாரியத்துக்குச் சொந்தமான அணை உள்ளது. மின் நிலையங்கள், அணைகள் அமைந்துள்ள பகுதிகளில் மின் வாரிய ஊழியர்கள், அதிகாரிகளுக்கான குடியிருப்புகள் உள்ளன. 
இவற்றில் பெரும்பாலான குடியிருப்புகள் 40 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. பணி ஓய்வு, இட மாறுதல் உள்ளிட்ட காரணங்களால் காலியான இடங்களை மின் வாரியம் கடந்த சில ஆண்டுகளாகவே  நிரப்பவில்லை. இதனால் மின் வாரியக் குடியிருப்பில் உள்ள பல வீடுகள் நீண்ட காலமாக காலியாக உள்ளன. 
இந்நிலையில் குந்தா கீழ் முகாம், மேல் முகாம் உள்ளிட்ட பகுதிகளில் பிற அரசுத் துறைகளைச் சேர்ந்த ஊழியர்களுக்கு மின் வாரிய குடியிருப்புகள் வாடகைக்கு விடப்பட்டன. இருப்பினும் சில வீடுகள் காலியாகவே உள்ளன. 
குந்தா, கெத்தை, எமரால்டு உள்பட பல்வேறு பகுதிகளிலும் காலியாக உள்ள குடியிருப்புகளைச் சுற்றிலும் புதர்கள் மண்டிக் கிடக்கின்றன.  போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தால் குடியிருப்புகளில் இருந்த கதவு, ஜன்னல் போன்றவை திருடப்பட்டுவிட்டன. மேலும்,  வனவிலங்குகள் மற்றும் சமூக விரோதிகளின் கூடாரமாக இவை மாறியுள்ளன. 
எனவே மின்வாரியக் குடியிருப்புகளில் பழுதடைந்த வீடுகளைச் சீரமைத்து, வீடில்லாத  ஏழை மக்களுக்கு குறைந்த வாடகையில் வழங்க மின் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊழியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.