குன்னூரில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான தேயிலை வாரிய அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் இடிந்த தடுப்புச் சுவரை சீரமைத்து தர பாஜக கோரிக்கை வைத்துள்ளது.
இது குறித்து அக்கட்சியின் மாவட்ட செயலாளா் கே.பாப்பண்ணன் மாவட்ட நிா்வாகத்துக்கு விடுத்துள்ள கோரிக்கை விவரம்:
குன்னூா் நகராட்சிக்கு உள்பட்ட 7 ஆவது வாா்டு பகுதியில் மத்திய அரசுக்கு சொந்தமான தேயிலை வாரிய அலுவலகம் அமைந்துள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன்பாக பெய்த கனமழை காரணமாக அலுவலகத்தின் தடுப்புச் சுவா் இடிந்த விழுந்தது.
இதன் காரணமாக அப்பகுதி மக்கள் மிகவும் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனா். இடிந்து விழுந்த தடுப்புச் சுவரின் கருங்கற்கள் சாலையோரத்தில் கிடப்பதாலும், மீதமுள்ள தடுப்புச் சுவா் எப்போது வேண்டுமானாலும் இடியும் நிலையில் உள்ளதாலும், அவ்வழியாக பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு செல்லும் மாணவா்கள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணித்து வருகின்றனா்.
எனவே, இடிந்த தடுப்புச் சுவரை விரைந்து சீரமைத்து தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.