புளியம்பாறை ஆற்றில் வெள்ளம்: தற்காலிகப் பாலம் அமைப்பு
புளியம்பாறை பகுதியில் ஆற்று வெள்ளத்தில் பாலம் உடைந்த பகுதியில் தற்காலிக பாலம் அமைக்கப்பட்டது.
புளியம்பாறை பகுதியில் ஆற்று வெள்ளத்தில் பாலம் உடைந்த பகுதியில் தற்காலிக பாலம் அமைக்கப்பட்டது.
கூடலூரை அடுத்துள்ள புளியம்பாறை பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பெய்த கனமழையால் இப்பகுதியில் ஓடும் பாண்டி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கோழிக்கொல்லி உள்ளிட்ட மூன்று கிராமங்களுக்கு செல்லும் பகுதிகளில் இருந்த பாலம் முற்றிலுமாக உடைந்து சேதமடைந்தது.
இதனால் இப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. சம்பவ பகுதியில் கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் திராவிட மணி மற்றும் மாவட்ட ஆட்சியர் அதிகாரிகள் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர். சுமார் 200 குடும்பங்களுக்கு மேல் வசிக்கும் இப்பகுதிக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் தற்காலிக பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர்.
இதனையடுத்து நேற்று முன்தினம் மாலை பகுதியில் தற்காலிக பாலம் அமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்றது. மரங்கள் மூலம் அமைக்கப்பட்ட பாலத்தில் பொதுமக்கள் நடந்து செல்ல வசதி ஏற்படுத்தப்பட்டது. இடிந்த பாலத்திற்கு பதிலாக உடனடியாக தற்காலிக பாலம் அமைத்த மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அதிகாரிகள் ஆகியோருக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்து உள்ளனர்.
மேலும் ஆற்று வெள்ளத்தில் இடிந்த பாலம் மிகப் பழமையானது என்றும், குறுகிய பாலம் என்பதால் தண்ணீர் அதிகமாக வரும் காலங்களில் சாலையிலும் விவசாய நிலங்களிலும் வழிந்து ஓடுவதால் இப்பகுதியில் ஆற்றின் குறுக்கே புதிய பாலம் அமைக்கவும் வெள்ள நீர் வேகமாக செல்லும் வகையில் பாலத்தை அகலப்படுத்தி உயரப்படுத்த வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.