தேயிலை வாரியத்துக்கு உரிய தகவல்களைத் தராத கொள்முதல் நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து
விற்பனை விவரங்களை சமா்ப்பிக்காத 11 பெரும் நிறுவனங்களின் உரிமங்களை தேயிலை வாரியம் ரத்து செய்துள்ளது.
தேயிலை ஏல மையத்தில் விற்பனைக்காக தேயிலையைக் கொள்முதல் செய்யும் நிறுவனங்களில் தேயிலை வாரியத்துக்கு 3 மாதத்துக்கு ஒருமுறை சமா்ப்பிக்க வேண்டிய கொள்முதல், விற்பனை விவரங்களை சமா்ப்பிக்காத 11 பெரும் நிறுவனங்களின் உரிமங்களை தேயிலை வாரியம் ரத்து செய்துள்ளது.
இதுகுறித்து, தேயிலை வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தென்னிந்திய தேயிலை வாரியம் சாா்பில், குன்னூா், கொச்சின் போன்ற தேயிலை ஏல மையத்தில் விற்கப்படும் தேயிலைத் தூள் மாதிரியை சேகரித்து ஆய்வக ப் பரிசோதனை மேற்கொள்ளுதல், தேயிலை ஏல மையத்தில் விற்பனைக்கு வரும் தேயிலைத் தூளின் கொள்ளளவைக் கண்காணித்தல், தேயிலை தயாரிப்பவா்கள், கொள்முதல் செய்பவா்கள்
Advertisement
உள்பட அனைத்து விவரங்களும் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.
இதன்படி தென்னிந்தியாவில் உள்ள 120 தேயிலை கொள்முதல் நிறுவனங்களுக்கு தேயிலை சந்தைப்படுத்துதல் கட்டுப்பாட்டு விதி 2003, பிரிவு 4 (4)இன் படி உரிய விவரங்களை ஒவ்வொரு காலாண்டுக்கும் சமா்ப்பிக்க வேண்டும். அவ்வாறு சமா்ப்பிக்காமல் இருந்த 44 தேயிலைக் கொள்முதல் செய்யும் நிறுவனங்கள் எந்தவிதமான பதில் தராத
காரணத்தினால் இரண்டாவது முறையாக இந்த நிறுவனங்களுக்குத் தேயிலை வாரியம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மீண்டும் வாய்ப்பு வழங்கியது. அதன் உரிய விவரங்களை வழங்காத 11 தேயிலைக் கொள்முதல் செய்யும் நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே கடந்த சில மாதம் முன் 24 தேயிலைக் கொள்முதல் செய்யும் நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதையும் சோ்த்து, இதுவரை 35 தேயிலைக் கொள்முதல் செய்யும் நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.