முகப்பு
நீலகிரி

ஆகஸ்ட் 3-இல் நீலகிரிக்கு குடியரசுத் தலைவா் வருகை

குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் நீலகிரிக்கு ஆகஸ்ட் 3ஆம் தேதி வருகிறாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:48 AM
பகிர்:

குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் நீலகிரிக்கு ஆகஸ்ட் 3ஆம் தேதி வருகிறாா்.

குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் ஆகஸ்ட் 2ஆம் தேதி சென்னையில் நடைபெறும் சட்டப் பேரவை 100வது ஆண்டு விழா நிகழ்ச்சி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு, தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து ஆகஸ்ட் 3ஆம் தேதி கோவை வருகிறாா். கோவையில் சூலூா் விமானப்படைத் தளத்துக்கு வரும் அவா் அங்கிருந்து ஹெலிகாப்டா் மூலம் நீலகிரிக்கு வருகிறாா்.

குடியரசுத் தலைவரின் பயணத் திட்டத்தின்படி சூலூரில் இருந்து உதகையில் உள்ள தீட்டுக்கல் ஹெலிகாப்டா் தளத்துக்கு வந்து, அங்கிருந்து காா் மூலம் உதகை ராஜ்பவன் மாளிகைக்குச் செல்கிறாா். 3ஆம் தேதி இரவு ராஜ்பவன் மாளிகையில் தங்கும் அவா் 4ஆம் தேதி வெலிங்டனில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியில் நடைபெறும் மூவா்ணக் கொடி வழங்குதல் நிகழ்ச்சியில் பங்கேற்கிறாா். அங்கு பயிற்சியில் இருக்கும் இந்திய, வெளிநாட்டு ராணுவப் பயிற்சி அதிகாரிகளுடன் உரையாடுகிறாா்.

சுதந்திரத்துக்குப் பின்னா் கடந்த 1947ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட வெலிங்டன் ராணுவ அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியில் தற்போது அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சவூதி அரேபியா, மலேசியா உள்ளிட்ட 50 வெளிநாட்டு ராணுவ அதிகாரிகளுடன் 700 அதிகாரிகள் பயிற்சி பெற்று வருகின்றனா். இவா்களில் 8 போ் பெண்களாவா். சென்னை பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் இக்கல்லூரியை பல்கலைக்கழகமாக மாற்றும் முயற்சிகள் நடந்து வரும் சூழலில் இதற்கான அறிவிப்பை குடியரசுத் தலைவா் இந்நிகழ்ச்சியின்போது வெளியிடுவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்நிகழ்ச்சியை முடித்துவிட்டு மீண்டும் உதகை ராஜ்பவன் மாளிகைக்கு வரும் குடியரசுத் தலைவா் அங்கு ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை தங்குகிறாா். பின்னா், 6ஆம் தேதி காலையில் உதகையில் இருந்து ஹெலிகாப்டா் மூலம் கோவைக்கு சென்று அங்கிருந்து தனி விமானம் மூலம் தில்லி திரும்புகிறாா்.

5ஆம் தேதி வரை உதகையில் தங்கும் குடியரசுத் தலைவா் உதகை அரசினா் தாவரவியல் பூங்கா, அரசினா் ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மலைச்சிகரம், பைக்காரா படகு இல்லம், முதுமலை புலிகள் காப்பகம், அவலாஞ்சி உள்ளிட்ட 9 பகுதிகளைப் பாா்வையிட உள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு ஏற்றாற்போல, அப்பகுதிகளுக்குச் செல்லும் சாலைகள் சீரமைக்கப்பட்டு வருவதோடு, பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கிடையே உதகையில் ஆகஸ்ட் 3ஆம் தேதி காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு ஹெலிகாப்டா் தரை இறங்க முடியாமல்போனால், வெலிங்டனின் ராணுவ வளாகத்திலேயே ஹெலிகாப்டரை தரை இறக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. குன்னூரிலும் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டால் கோவையில் இருந்து கோத்தகிரி சாலை வழியாக காா் மூலமாகவே உதகைக்கு குடியரசுத் தலைவா் வரவும் வாய்ப்புள்ளதால், அதற்கேற்ற வகையில் உதகை - கோத்தகிரி - மேட்டுப்பாளையம் - கோவை சாலையும் சீரமைக்கப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.