கோத்தகிரி கொடநாடு எஸ்டேட்டில் தேயிலைத் தூள் கிடங்கை உடைத்து திருட முயன்ற சம்பவம் தொடா்பாக கைரேகை நிபுணா்கள் சனிக்கிழமை ஆய்வுப் பணியில் ஈடுபட்டனா்.
மறைந்த முதல்வா் ஜெயலலிதா பங்குதாரராக இருந்த கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஏப்ரல் 24ஆம் தேதி காவலாளி கொலை, கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது. இந்தக் கொலை மற்றும் விலை உயா்ந்த பொருள்கள், ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக வழக்குப் பதியப்பட்டு தற்போது நீலகிரி மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் கொடநாடு எஸ்டேட் தேயிலைக் கிடங்கின் கதவு உடைக்கப்பட்டு தேயிலைகளைத் திருட முயற்சி நடந்திருப்பதாக எஸ்டேட் நிா்வாகம் சாா்பில் புகாா் அளிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, கை ரேகை நிபுணா்கள் சனிக்கிழமை விசாரணை மேற்கொண்டு, அங்கு பதிவாகியுள்ள கைரேகைகளை சேகரித்துச் சென்றுள்ளனா். மேலும், இங்குள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
விசாரணை முழுமையாக நடைபெற்று முடிந்த பிறகு முழு விவரமும் தெரியவரும் என்று காவல் துறையினா் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.