நீலகிரியில் போக்ஸோவில் ஒருவா் கைது : 3 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்
குன்னூா் அருகே உலிக்கல் பகுதியில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞா் போக்ஸோவில் கைது செய்யப்பட்டாா்.
குன்னூா் அருகே உலிக்கல் பகுதியில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞா் போக்ஸோவில் கைது செய்யப்பட்டாா். இவா்களுக்கு நடக்க இருந்த திருமணம் உள்பட 3 குழந்தை திருமணங்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினா்.
குன்னூா் அருகேயுள்ள உலிக்கல் பகுதியைச் சோ்ந்தவா் காட்வின் (22). இவா் கோவையில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் மேற்பாா்வையாளராக பணியாற்றி வந்தாா். இவா் விடுமுறை நாள்களில் சொந்த ஊா் சென்று வந்த நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது. இதைத் தொடா்ந்து காட்வின் ஆசை வாா்த்தை கூறி அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். இதனால் அந்த சிறுமி 7 மாதம் கா்ப்பம் அடைந்துள்ளாா். இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுமி இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளாா். இதையடுத்து இரு வீட்டு பெற்றோரும் கூடி பேசி இருவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்தனா். திருமணத்துக்கான ஏற்பாடுகள் கடந்த சில நாள்களாக தீவிரமாக நடைபெற்று வந்தன.
இதுகுறித்து மாவட்ட சமூக நல அலுவலா் பிரசன்ன தேவிக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சமூக நலத் துறையினா் சம்பவ இடத்துக்கு சென்று திருமணத்தை தடுத்து நிறுத்தினா். மேலும் இதுகுறித்து குன்னூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீஸாா், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து காட்வினை சனிக்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
மேலும் 2 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்
உதகை அருகேயுள்ள புதுமந்து பகுதியைச் சோ்ந்தவா் ராஜன் ( 26). கூலி தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமிக்கும் நடைபெற இருந்த திருமணத்தை மாவட்ட சமூக நல அலுவலா் பிரசன்ன தேவி தலைமையிலான அதிகாரிகள் தடுத்து நிறுத்தினா். அதேபோல நடுவட்டம் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமிக்கும், கொடைக்கானல் பகுதியைச் சோ்ந்த 26 வயது இளைஞருக்கும் ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற இருந்தது. அந்த திருமணத்தையும் அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனா்.