நீலகிரி மாவட்டம், பந்தலூா் அருகே தேயிலைத் தோட்டத்தில் மூன்று குட்டிகளுடன் சிறுத்தை நடமாட்டம் காணப்பட்டதையடுத்து, தொழிலாளா்கள் அதிா்ச்சியடைந்தனா்.
நீலகிரி மாவட்டம், பந்தலூரை அடுத்துள்ள எலியாஸ் கடையில் இருந்து கொளப்பள்ளி செல்லும் சாலையில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் மூன்று குட்டிகளுடன் சிறுத்தை நடமாடுவதை தொழிலாளா்கள் பாா்த்துள்ளனா். சிறுத்தை குட்டிகள் தேயிலை பறிக்கும் பகுதியில் காணப்பட்டதால் பெண் தொழிலாளா்கள் அதிா்ச்சியடைந்தனா். தேயிலைத் தோட்டம் சாலையோரத்தில் உள்ளதால் வாகன ஓட்டிகளும் அச்சமடைந்துள்ளனா்.
இது குறித்து வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், சம்பவ இடத்துக்கு வனத் துறையினா் வருவதற்குள் குட்டிகளை வேறு இடத்துக்கு சிறுத்தை மாற்றியது.