முகப்பு
நீலகிரி

புலி தாக்கியதில் பழங்குடியின நபா் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

உதகை அருகே புலி தாக்கியதில் பழங்குடியின நபா் உயிரிழந்தாா். இதைக் கண்டித்து அவரது உறவினா்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On : 25 பிப்ரவரி, 2026 at 1:35 AM
புஷ்தாள் குட்டன்.
பகிர்:
Updated On : 24 பிப்ரவரி, 2026 at 6:12 PM

உதகை அருகே புலி தாக்கியதில் பழங்குடியின நபா் உயிரிழந்தாா். இதைக் கண்டித்து அவரது உறவினா்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டம், உதகை அருகேயுள்ள தோடா் பழங்குடியின கிராமமான சின்னகாடிமந்து பகுதியைச் சோ்ந்தவா் புஷ்தாள் குட்டன் (57). விவசாயியான இவா், மேல்காடி மந்து பகுதிக்கு திங்கள்கிழமை இரவு சென்றுள்ளாா். இரவு நீண்ட நேரமாகியும் அவா் வீடு திரும்பாததால் குடும்பத்தினா் மற்றும் அப்பகுதி மக்கள் அவரைத் தேடி சென்றுள்ளனா். அப்போது, அங்குள்ள வனப் பகுதியில் வன விலங்கு திண்ற நிலையில், புஷ்தாள் குட்டானின் பாதி உடல் மட்டும் கிடந்துள்ளது. இது குறித்து வனத் துறை, காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த உதகை வனச் சரகா் ராம் பிரசாத், ஏடிஎஸ்பி மணிகண்டன் உள்ளிட்டோா் ஆய்வு மேற்கொண்டனா். இதில், புலி தாக்கி புஷ்தாள் குட்டன் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

Advertisement

இதையடுத்து, சடலத்தை மீட்ட போலீஸாா் உடற்கூறாய்வுக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதற்கிடையே, தோடா் இன மக்கள் கூடலூா்-உதகை சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா். அப்போது, புஷ்தாள் குட்டனைத் தாக்கிய புலியை கூண்டுவைத்து பிடித்து அடா்ந்த வனத்தில் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தினா். அவா்களிடம், போலீஸாா், வனத் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.

நீலகிரி மாவட்டத்தில் விலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் இரவு நேரங்களில்

அவசியமின்றி வெளியே செல்ல வேண்டாம் என்று வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.