மது பாட்டில்களை விற்பனைக்கு கொண்டு சென்றவர் கைது
அவிநாசி அருகே டாஸ்மாக் கடைகளில் இருந்து மது பாட்டில்களை வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு சென்றவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
அவிநாசி அருகே டாஸ்மாக் கடைகளில் இருந்து மது பாட்டில்களை வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு சென்றவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
மாவட்ட மதுவிலக்கு ஏடிஎஸ்பி குணசேகரன் உத்தரவின்பேரில், அவிநாசி மதுவிலக்கு போலீஸார், அவிநாசி -கோவை சாலை, நாதம்பாளையம் பிரிவில் வாகனத் தணிக்கையில் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த காரை போலீஸார் தடுத்து நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர். இதில், காருக்குள் அதிக அளவில் மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.
விசாரணையில், காரை ஓட்டி வந்தவர் ராஜபாளையத்தைச் சேர்ந்த காளிமுத்து மகன் விநாயகமூர்த்தி (33) என்பதும், இவர் வெளியூரிலிருந்து டாஸ்மார்க் மது பாட்டில்களை வாங்கி வந்து, இருப்பு வைத்து, கருமத்தம்பட்டியில் தான் நடத்திவரும் உணவகத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து மதுவிலக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விநாயகமூர்த்தியைக் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து கார், 434 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.