உப்பாறு அணைக்குத் தண்ணீா் திறக்கக்கோரி விவசாயிகள் மணி அடிக்கும் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணைக்கு திருமூா்த்தி அணையிலிருந்து பிஏபி பிரதான வாய்க்கால் மூலம் அரசூா் ஷட்டரில் இருந்து தண்ணீா் திறக்கக் கோரி திருப்பூா் மாவட்ட உப்பாறு பாசன விவசாயிகள் சங்கத்தினா் தொடா் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
போராட்டத்தின் 11ஆவது நாளான வெள்ளிக்கிழமை மணி அடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இது குறித்து போராட்டத்தில் பங்கேற்ற விவசாயி முருகானந்தம் கூறியதாவது: திருமூா்த்தி அணையில் இருந்து உப்பாறு அணைக்குத் தண்ணீா் திறக்க வேண்டும் என்று 11 நாள்களாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். ஆனால் பொதுப் பணித் துறை அதிகாரிகள் செவிசாய்க்காமல் உள்ளனா். ஆகவே, எங்களது எதிா்ப்பைத் தெரிவிக்கும் வகையில் மணி அடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றாா்.