முகப்பு
திருப்பூர்

கொங்கு மண்டலத்தில் ரஜினிக்கு ஆதரவு அலை இல்லை: ஈஸ்வரன்

கொங்கு மண்டலத்தில் ரஜினிக்கு ஆதரவு அலை இல்லை என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாநில பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்தார்.  

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
ஈஸ்வரன்.
பகிர்:

கொங்கு மண்டலத்தில் ரஜினிக்கு ஆதரவு அலை இல்லை என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாநில பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்தார்.  

திருப்பூர் மேற்கு மாவட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுக்குழு கூட்டம் பல்லடம் கட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கரைப்புதூர் சி.ராஜேந்திரன் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சி மாநில பொதுச்செயலாளர் ஈஸ்வரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது. 

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி திமுக கூட்டணியில் தான் நீடிக்கிறது. அதில் எந்த குழப்பமும் இல்லை. தமிழகத்தில் ஆளும் கட்சியும், பிரதான எதிர்கட்சியும் தேர்தல் பிரசாரத்தை துவக்கி விட்டனர். திமுக கூட்டணிக்கு நாங்கள் ஆதரவு தெரிவித்துள்ளோம். வரும் ஜனவரியில் நாங்கள் தேர்தல் பிரசாரத்தை துவக்கவுள்ளோம். நடிகர் ரஜினிகாந்த டிசம்பர் 31-ஆம் தேதி அரசியல் கட்சி ஆரம்பிக்கப்போவதாக அறிவிப்பு வெளியிட்டார். 

அதற்கு பின்னர் வந்த அவரது பிறந்த நாளையை கொங்கு மண்டலத்தில் எங்கும் எழுச்சியுடன் கொண்டாடியதாக எந்த தகவலும் இல்லை. கொங்கு மண்டலத்தில் ரஜினிக்கு ஆதரவு அலை இல்லை. பா.ஜ.க.தான் ரஜினிக்கு மவுஸ் இருப்பது போல் பில்டப் செய்து வருகிறது. மத்திய அரசின் வேளாண்மை மசோதாவால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். அதனை அரசு திரும்ப பெற வேண்டும். 

உழவர் தலைவர் நாராயணசாமிநாயுடு மறைவிற்கு பின்னர் உழவர்களுக்கு போராட்ட குணம் குறைந்துள்ளது. கரோனா பாதிப்பு பொது முடக்கத்தின் போது குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று அரசுக்கு எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். நிதி இல்லை என்று அன்று சொன்ன அதிமுக அரசு தற்போது ஒட்டுக்காக பொங்கலை காரணம் காட்டி ரூ.2500 பொங்கல் பரிசு அறிவித்துள்ளது. 

உண்மை என்ன என்று மக்களுக்கு நன்கு தெரியும் மக்களை ஏமாற்ற முடியாது. முதல்வராக மு.க.ஸ்டாலின் வருவது உறுதி. பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைந்தால் தான் நாட்டில் விலைவாசி உயராது என்றார். இதில் மாவட்ட தலைவர் ராமசாமி, மாவட்ட பொருளாளர் ஆறாக்குளம் சுப்பிரமணியம், மேற்கு மண்டல இளைஞரணி செயலாளர் பெரியசாமி, மாவட்ட இளைஞரணி செயலாளர் நாகராஜன்,மகளிரணி செயலாளர் விஜயலட்சுமி உள்பட பலர் பங்கேற்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →