காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விற்பனை துவக்கம்: முதல் நாளில் ரூ.16 லட்சம் மதிப்பில் தேங்காய் பருப்பு ஏலம்
காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திங்கள்கிழமை விற்பனை துவங்கியது. முதல் நாளில் ரூ.16 லட்சம் மதிப்பிலான தேங்காய் பருப்புகள் ஏலம் போனது.
காங்கயம்: காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திங்கள்கிழமை விற்பனை துவங்கியது. முதல் நாளில் ரூ.16 லட்சம் மதிப்பிலான தேங்காய் பருப்புகள் ஏலம் போனது.
காங்கயம் நகரம், கரூர் சாலை பகுதியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திங்கள்கிழமை (டிச.28) முதல் திங்கள்கிழமை தோறும் தேங்காய் மற்றும் தேங்காய் பருப்பு மறைமுக ஏல முறையில் விற்பனை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், முதல் நாளான திங்கள்கிழமை காங்கயம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த 16 விவசாயிகள் 255 மூட்டை (12 ஆயிரத்து 750 கிலோ) தேங்காய் பருப்பினை (கொப்பரை) விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். முத்தூர், காங்கயம், வெள்ளகோவில் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 14 வியாபாரிகள் தேங்காய் பருப்புகளை வாங்க வந்திருந்தனர்.
இங்கு நடைபெற்ற முதல நாள் ஏலத்தில் ரூ.16 லட்சத்திற்கு பருப்புகள் விற்பனையானது. தேங்காய் பருப்பு அதிக பட்சமாக ஒரு கிலோ ரூ.125-க்கும், குறைந்த பட்சமாக ரூ.90-க்கும் சராசரியாக ரூ.124-க்கும் ஏலம் போனது. ஏலத்திற்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட மேற்பார்வையாளர் மகுடீஸ்வரன் செய்திருந்தார்